Karur stampede incident – Summons to Senthil Balaji? Photograph: (cbi)
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கின் விசாரணை மாநில காவல்துறையிடமிருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
அதன்படி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி (12.01.2026) டெல்லியில் உள்ள சி.பி.ஐ.யின் தலைமை அலுவலகத்தில் சுமார் 7 மணி நேரம் விஜய்யிடம் முதல் கட்ட விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஜனவரி 19ஆம் தேதி (19.01.2026) மீண்டும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்ட விஜய்யிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் பிரச்சார கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்தது ஏன்?. கூட்டத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் என்ன?. பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? என 80க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் மூன்றாவது முறையாக நாளை (10.03.2026) மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்குப் புதிதாகச் சம்மன் அனுப்பப்பட்டது. மற்றொருபுறம் த.வெ.க. வேட்பாளர்கள் நேர்காணலை விஜய் நாளை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ள நிலையில், பல்வேறு நிகழ்வுகள் இருப்பதால் 10 நாட்கள் கால அவகாசம் வழங்க விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் சிபிஐ அனுப்பிய மின்னஞ்சலுக்கு செந்தில்பாலாஜி தரப்பு பதிலளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
Follow Us