தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 27.09.2025 அன்று கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். தவெக தரப்பில் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் அவருக்கு அடைக்கலம் தந்ததாக அக்கட்சியின் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மேலும், தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் என பலர் இடம் பெற்றுள்ளனர். கடந்த மூன்று நாட்களாகவே கரூர் பகுதியில் முகாமிட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஏற்பட்ட பகுதியில் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இரண்டு காவல் வேன்கள் மற்றும் காரில் வந்திருந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள பவுன்ராஜ் தரப்பில் தனக்கு ஜாமீன் வேண்டும் என கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால் ஜாமீன் கொடுக்க முடியாது என கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து அவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.