கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த சம்பவத்தை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிப்பதற்கு எதிராக த.வெ.க .சார்பில் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதே சமயம் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர் தரப்பில் சிபிஐ விசாரணை கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

Advertisment

இதனையடுத்து இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 13ஆம் தேதி (13.10.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இது குறித்து நீதிபதிகள், “ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவில் இரு ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடம்பெறுவார்கள். அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக் கூடாது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ மாதந்தோறும் அறிக்கை தர வேண்டும். 

Advertisment

விசாரணையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை அஜய் ரஸ்தோகி முடிவு செய்யலாம்” எனத் தெரிவித்திருந்தனர். இந்த உத்தரவின் பேரில் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரியான பிரவீன்குமார் ஐ.பி.எஸ். தலைமையிலான குழுவினர் கரூருக்கு இன்று (17.10.2025) வந்துள்ளனர். இந்த குழுவில் ஏ.எஸ்.பி. முகேஷ் குமார் மற்றும் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூவர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் சிறப்பு விசாரணை குழுவினர் (எஸ்.ஐ.டி.) இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.