கோப்புப்படம்
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கின் விசாரணை மாநில காவல்துறையிடமிருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
அதன்படி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி (12.01.2026) டெல்லியில் உள்ள சி.பி.ஐ.யின் தலைமை அலுவலகத்தில் சுமார் 7 மணி நேரம் விஜய்யிடம் முதல் கட்ட விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஜனவரி 19ஆம் தேதி (19.01.2026) மீண்டும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்ட விஜய்யிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் பிரச்சார கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்தது ஏன்?. கூட்டத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் என்ன?. பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? என 80க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் மூன்றாவது முறையாக இன்று (10.03.2026) மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்குப் புதிதாகச் சம்மன் அனுப்பப்பட்டது. மற்றொருபுறம் த.வெ.க. வேட்பாளர்கள் நேர்காணலை விஜய் இன்று தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ள நிலையில், பல்வேறு நிகழ்வுகள் இருப்பதால் 10 நாட்கள் கால அவகாசம் வழங்க விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. என்வே விஜய் டெல்லிக்குச் செல்லவில்லை. அதோடு ஏற்கனவே திட்டமிட்டபடி, த.வெ.க. சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 25 பேரிடம் இன்று விஜய் நேர்காணலை நடத்துவார் எனவும் தகவல் வெளியாகியிருந்தது
மற்றொருபுறம் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் , கரூர் திமுக மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்குப் பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ. அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us