karnataka plans bill to ban rss events in government places
கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக கடந்த 12ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சமீராபுரா அரசு பள்ளி, வித்யவர்தகா பள்ளிக்குப் பின்னால் உள்ள மைதானம் மற்றும் பிற பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி நடத்தினர். பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல மாணவர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.
இந்த சூழ்நிலையில் அரசுப் பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் கோயில்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவின் மகனும், கிராமப்புற வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே, சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், அரசுப் பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் கோயில்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே பிளவுபடுத்தும் கருத்துக்களை ஆர்.எஸ்.எஸ் பரப்புவதாகவும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் தேசிய ஒற்றுமைக்கு எதிரானது என்றும் கூறி, அவற்றை முழுமையாகத் தடை செய்யுமாறு கூறியிருந்தார். இதற்கு பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் பிரியங்க் கார்கே எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தகவல் தெரிவித்தார். இதனிடையே, ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்கு தடை செய்யக் கோரி கடிதம் எழுதியிருந்த தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக அமைச்சர் பிரியங்க் கார்கே குற்றம் சாட்டினார். மேலும், அச்சுறுத்தல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில உள்துறை அமைச்சகத்திற்கு பிரியங்க் கார்கே கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கிடையில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் இதுபோன்ற அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி சித்தராமையாவுக்கும் அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதினார். இதுபோன்ற பங்கேற்பை கண்டிப்பாக தடை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கும் விதமாக, அரசு வளாகங்கள் மற்றும் சொத்துக்களின் பயன்பாட்டை ஒழுங்கப்படுத்துதல் மசோதாவை கர்நாடகா அரசு கொண்டு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசு வளாகத்தில் நடைபெறும் எந்தவொரு மத அல்லது அரசியல் நிகழ்ச்சிகளுக்கு கட்டாய அனுமதி பெற வேண்டும் எனவும், மாவட்ட ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஒப்புதல் அளிக்கும் அதிகாரிகளாகச் செயல்படுவார்கள் என்றும் அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விதிமுறை மீறல்களுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கவும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முதல் முறையாக விதிகளை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், மீண்டும் மீண்டும் விதிகளை மீறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும், தொடர்ச்சியான மீறல்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow Us