கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா முதல்வராகப் பொறுப்பு வகித்து வருகிறார். பாஜகவின் மூத்த தலைவர் அசோகா, எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இந்த நிலையில் அசோகா, ஆளும் காங்கிரஸ் அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, அவர் எழுப்பிய கேள்விகள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, கடந்த மூன்று ஆண்டுக்கால ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, அவர்களுக்காகச் செலவு செய்யாமல் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியர்களிடம் பேசிய அசோகா, “கர்நாடகாவில் கடந்த பட்ஜெட்டில் பட்டியல் இன மக்களுக்கான துணை திட்டம் மற்றும் பழங்குடியினர்களுக்கான துணை திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கான நலத் திட்டங்களுக்காக ரூ.42,018 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், கிட்டத்தட்ட ரூ.35,000 கோடி இலவசத் திட்டங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது. வெறும் ரூ.7,000 கோடி மட்டுமே பட்டியலின மக்களின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மூன்று ஆண்டுகளாகப் பட்டியலின மக்களின் வளர்ச்சி நிதியை வெவ்வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தி வருகிறது. இதனால் பட்டியலின மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் வளர்ச்சி மேம்பாட்டிற்கு நிதி இல்லாமல் அந்த துறை கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. காங்கிரஸ் அரசு தனது இலவசத் திட்டங்களுக்காகப் பட்டியலின மக்களின் நிதியை அபகரித்துள்ளது கண்டிக்கத்தக்கது. இது குறித்து, முதல்வர் சித்தராமையா வரும் பட்ஜெட்டில் பதிலளிக்க வேண்டும். இந்த அநீதியை எதிர்த்து பாஜக விரைவில் போராட்டத்தை முன்னெடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Follow Us