காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாகவுள்ளது. இதற்காக தொடர்ந்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். காவாய் தலைமையிலான அமர்வு முன்பு கடந்தாண்டு நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை கட்டுவதற்காக திட்ட அறிக்கையை தயார் செய்ய அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. அந்த அறிக்கையை விரைவாக தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக விரைவில் முன்மொழிவு தாக்கல் செய்யப்படும் என்றும் வனப்பகுதியை பயன்படுத்துவதற்கான அனுமதி பெற விரைவில் முன்மொழிவு தாக்கல் செய்யப்படும் என்றும் கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Follow Us