தற்காலத்தில் சமூக வலைத்தளங்கள் அனைத்துத் தரப்பு மக்களாலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில், குழந்தைகள், சிறுவர்கள், மாணவர்கள் எனக்  குறைந்த வயதிலிருக்கும் இளம் பருவத்தினரும் அதிகமாக பயன்படுத்துகின்றனர். பொதுவாக, நீண்ட நேரம் லேப்டாப் மற்றும் செல்போன்கள் போன்றவற்றை பயன்படுத்துவதால் உடல் ரீதியான பிரச்சினைகளும், மன ரீதியிலான பிரச்சனைகளும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், சமூக வலைத்தளங்களில் வரும் காட்சிகளுக்கு (தகவல்கள்) சிறுவர்கள் எளிதில் ஆட்படுத்தப்படுவதால், பல சமயங்களில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ்வதற்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. இத்தகைய, காரணங்களால் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையை மாற்றும் வகையில் ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ள கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் மசோதாவை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisment

கர்நாடகா மாநிலத்தில் 2026-2027ஆம் நிதியாண்டிற்கான சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று (06-03-26) மாநில முதல்வர் சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்த போது, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை செய்யும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். பள்ளி செல்லும் குழந்தைகள், மொபைல் போன் பயன்பாடு மற்றும் சமூக ஊடக வெளிப்பாட்டின் அதிகரித்து வரும் தாக்கம் குறித்த கவலைகளை மேற்கோள் காட்டி இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

பட்ஜெட்டின் பள்ளிக் கல்விப் பிரிவின் கீழ் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இந்த திட்டம், அதிகப்படியான திரை நேரம், மனநலக் கவலைகள் மற்றும் கல்வித் திறனில் டிஜிட்டல் கவனச்சிதறலின் சாத்தியமான தாக்கம் போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தனது பட்ஜெட் உரையில் சித்தராமையா, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் விரும்புவதாகக் கூறினார். 

Advertisment