திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக டி.ஆர். பாலு நாடாளுமன்ற மக்களவையில் இன்று (05.12.2025) பேசுகையில், “நூற்றாண்டுகளுக்கு மேலாக தீபம் ஏற்றும் இடத்தில் இந்த ஆண்டும் அறநிலையத்துறை சார்பில் தீபம் ஏற்றப்பட்டது. அதாவது கடந்த 1996, 2017ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகளின் படி பாரம்பரிய இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்க திட்டமிடுகின்றனர். அதனால் தான் அவர்கள் பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நீதிமன்றம் சென்றனர். 

Advertisment

அதன்படி நீதிபதி சுவாமிநாதனின் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளார். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு தமிழ்நாட்டில் மத ரீதியிலான பதற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் பதற்றம் ஏற்பட யார் காரணம்.நாட்டை ஆளும் கட்சி மதரீதியிலான கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது” எனப் பேசினார். அதே சமயம் அவர்  டி.ஆர்.  பாலு பேச்சுக்கு மக்களவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பாஜக எம்.பி.க்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

Advertisment

இதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “பாராளுமன்றத்தின்  பொறுப்பு அமைச்சராக இருக்கக்கூடிய கிரண் ரிஜுஜு, மூத்த  உறுப்பினர் டி.ஆர் பாலுவை பார்த்து நீங்கள் பேசுவது உங்களுக்கும் நல்லதல்ல; உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல என்று மிரட்டக்கூடிய வகையிலே எச்சரிக்கை விடக்கூடிய வகையிலே பேசியிருப்பது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமில்லாமல் ஜீரோ ஹவர் (பூஜ்ஜிய நேரத்தில்) உறுப்பினர்களின் நேரம் ஆகும். அப்போது உறுப்பினர்கள் அவர்களது பிரச்சனையை எழுப்ப  கூடிய நேரம் அது. ஆனால் அந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு  அமைச்சர் முருகன், தேவையில்லாமல் அங்கே மிக நீண்ட ஒரு உரையை ஆற்ற அனுமதிக்கப்பட்டார். அவரும் பல பொய் பிரச்சாரங்களை அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு பேசியிருக்கிறார். 

tr-baalu-lok-sabha

தமிழக அரசின் மீது ஒரு காழ்பை உருவாக்க வேண்டும். தமிழக மக்கள் மீது ஒரு காழ்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அவருடைய உரை அமைந்துள்ளது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து பாஜகவின் அரசியல் வியூகம் என்பது மத கலவரத்தை உருவாக்குவதுதான் என்பதை கண்கூடாக ஒவ்வொரு இடத்திலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதை தமிழ்நாட்டில அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் தமிழ்நாட்டிலே அவர்களுக்கு வாக்களிக்க தமிழ் மக்கள் தயாராக இல்லை என்பதை புரிந்து கொண்டு ஒரு மத கலவரத்தை பிரச்சனையை உருவாக்கி அரசிற்கு கெட்ட பெயரை உருவாக்கி விட வேண்டும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

அவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் தமிழர்களாக தங்களை முதலில் உணர்ந்தவர்கள். அடுத்து அவர்களுக்கு யார் தங்களுக்காக பாடுபடுகிறார்கள் பெரும்பான்மை மக்களை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கு யார் உழைக்கிறார்கள். யார் மக்களை பிளவுபடுத்தி அவர்களை ஒரு ஆபத்திலே தள்ள நினைக்கிறார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டவர்கள் தமிழர்கள். அதனால் இந்த மாதிரி பிரச்சனைகளை உருவாக்குவது எந்த காலத்திலும் அவர்களுக்கு பயன்படாது. இந்த நாட்டின் ஒற்றுமையை  குலைக்கத்தான் இது பயன்படுகிறது என்பதை அவர்கள் எச்சரிக்கையாக புரிந்து கொள்ள வேண்டும்” எனப் பேசினார்.