Kanimozhi MP meets Prime Minister Modi Photograph: (modi)
பிரதமர் மோடியை திமுக துணைப் பொதுச்செயலாளரும் திமுக எம்பியுமான கனிமொழி சந்தித்துள்ளார்.
கடந்த 26/07/2025 அன்று தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி, 451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதோடு 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 3600 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரயில் மற்றும் சாலை திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்கான புதிய முனையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று (08/08/2025) பிரதமரை சந்தித்துள்ள திமுக எம்பி கனிமொழி இதுகுறித்து தன்னுடைய 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இன்று புதுதில்லியில், பிரதமரை சந்தித்து, தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி துறைமுகத்தில் உள்ள போக்குவரத்து மையம் உட்பட எனது தொகுதி மற்றும் தமிழ்நாடு தொடர்பான முக்கிய பிரச்சனைகளை எழுப்பினேன். தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்துவதில் அளித்த ஆதரவிற்கும் நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.