கோப்புப்படம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடைகள் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் சேவைகள் அதிரடியாகக் குறைக்கப்பட்டன. அதாவது கடந்த 20ஆம் தேதி முதல் வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி வரை ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படும் என தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வழக்கமாக இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, 164 சேவைகள் மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் கடந்த 4 நாட்களாக ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில், தெற்கு ரயில்வே நேற்று (23.02.2026) இரவு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் ரயில் சேவைகள் மேலும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த 4 நாட்களாக இயக்கப்பட்டு வந்த 164 ரயில் சேவைகளில் இருந்து 115 சேவைகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மேலும் அவதி அடைந்துள்ளனர். இது தொடர்பாக முறையான முன்னறிவிப்பு இன்றி ரயில்கள் ரத்து செய்யப்படுவதால், பணிக்குச் செல்லும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11வது நடைமேடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்து, மீண்டும் முழுமையான அளவில் ரயில்களை இயக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ரயில்கள் ரத்து மற்றும் நேர மாற்றம் குறித்து அனைத்து ரயில் நிலையங்களிலும் தெளிவான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை புறநகர் ரயில் சேவையில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தின் இரு மார்க்கத்திலும் வழக்கமாக 204 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் 164 சேவைகளாக குறைக்கப்பட்டு தற்போது 115 ஆக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/24/mrts-train-2026-02-24-15-13-55.jpg)
இந்நிலையில் இது தொடர்பாகக் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாட்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது.
ஏற்கனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us