Kanchipuram district administrators resign from OPS
அதிமுகவில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து வந்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமைகள் மீட்பு கழகத்தை நடத்தி வருகிறார். ஆனாலும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் அதிமுகவில் தன்னை இணைத்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். அந்த கோரிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் நிராகரித்து வருகின்றனர். இதனிடையே, தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து தை மாதத்தில் அறிவிப்பதாக ஒவ்வொரு செய்தியாளர்கள் சந்திப்பிலும் ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்தார்.
இந்த சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகி திமுக, அதிமுகவில் இணைந்து வருகின்றனர். தன்னுடன் இருந்த முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து விலகி வெவ்வேறு கட்சிகளில் இணைந்து வருவது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த ஜனவரி 23ஆம் தேதி மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடக்க விழாவில் கூட ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.
அதிமுகவில் இணையவில்லை என்றாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த கூட்டணியிலும் அவர் தற்போது வரை இணையவில்லை. அதற்கு பா.ஜ.க எந்தவித சமிக்ஞையும் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்து ஆதரவாளர்கள் விலகல், கூட்டணி தொடர்பாக எந்தவித முன்னேற்றமில்லாதது என அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களால் ஓ.பன்னீர்செல்வம் தனித்துவிடப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஓபிஎஸ்ஸிடம் இருந்து கூண்டோடு விலகுவதாகக் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து அதிமுக உரிமை மீட்பு கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “நான் அதிமுக உரிமை மீட்பு மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்தேன். என்னுடன் பல நிர்வாகிகள் ஊராட்சி, ஒன்றிய, பேரூராட்சி, மாநகராட்சி, நகராட்சி என பல்வேறு பகுதிகளை நாங்கள் கட்டமைத்து பணியாற்றி வந்தோம். இந்த நிலையில் இரட்டை இலையோடு ஒன்று சேர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஒன்று சேர்ந்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒற்றுமையாக இவ்வளவு நாள் காத்துக் கொண்டிருந்தோம். அது ஒரு காலமும் முடியாது என்ற சூழ்நிலை வந்துள்ளது. ஓபிஎஸ் மிகவும் நல்லவர், அவர் மேல் எந்தவித குறைபாடுகளும் கிடையாது. ஆனாலும் அவருக்கு ஏதோ ஒன்று தடையாக இருக்கிறது என்பது மட்டும் உணர முடிகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டச் செயலாளர்களை கூட்டி திமுகவுடன் கூட்டணி வைக்கலாமா? விஜய்யுடன் கூட்டணி வைக்கலாமா? என்று ஓபிஎஸ் கேட்டார். முதல் ஆளாக நான், விஜய்யுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை எழுதி கொடுத்தேன். அதன்படி தமிழ்நாடு முழுவதும் வந்திருந்த அனைத்து மாவட்டச் செயலாளர்களும் விஜய்யுடன் கூட்டணி இருக்க வேண்டும் என்று உறுதிப்பட எழுதி கொடுத்தார்கள். அதை அப்படியே வாங்கி வைத்துக்கொண்டு அவர் எதற்காக இன்னும் விஜய்யை சந்திக்கவில்லை என்று தெரியவில்லை. அவர் விஜய்யை சந்தித்தாரா? இல்லையா? என்ன சூழ்நிலை என்பதை கூட அவர் இன்னும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளவில்லை. ஒரு கட்சித் தலைவர் என்றால் அனைத்து பொறுப்பும் அவர் ஏற்க வேண்டும். அந்த தலைமை பொறுப்பு இதுவரை என்னவென்றே தெரியாமல் மூழ்கி கிடக்கிறோம். இன்னும் 10, 15 நாட்களுக்குள் தேர்தல் அறிவித்துவிடுவார்கள். அதன் பிறகு வேறு எங்காவது போவதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அந்த சூழ்நிலையை மனதில் வைத்துக் கொண்டு, நான் அவரை நேரடியாக சந்தித்து உங்கள் குடும்ப உறுப்பினராகவோ, நண்பராகவோ இருந்துவிடுகிறேன். என்னை விட்டுவிடுங்கள். நான் ஏதாவது ஒரு இயக்கத்தில் சென்று 2026இல் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி காஞ்சிபுரத்தி வெற்றி பெற்று உங்களை சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு இந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளேன்” என்று கூறினார்.
Follow Us