Kamal Haasan roared in Parliament at budget session
நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடப்பாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், மாநிலங்களவையில் இன்று (04-02-26) பேசினார்.
அப்போது அவர், “இந்த தருணத்தை நான் கெளரவமாகக் கருதுகிறேன். இங்கு வர இயலாது போன தமிழர் தலைவர்களே நன்றி. என் சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கும், என் அன்பான தேசத்திற்கும் நன்றி. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் மக்களுக்காகப் பேச இந்த அவையில் நுழைய பல கதவுகள் திறக்கப்பட்டிருக்கிறது. அது போல் என் கதவுகள் சினிமாவின் தாழ்வாரங்கள் வழியாக திறக்கப்பட்டிருக்கிறது. பரமக்குடியைச் சேர்ந்த ஒரு குழந்தை, சினிமாவில் புகழைப் பெற்றது. அப்போது தான் எனக்கு சினிமாவும் என் தமிழ் வரலாறும் அறிமுகமானது. நான் ஒரு குழப்பமான யதார்த்தத்தை எதிர்கொண்டேன். அந்த யதார்த்தம் நமது அரசியலமைப்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைப் பிரதிபலிக்காதது தான். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். என்னுடைய தமிழ் ஆசிரியர்களால் எனக்கு என் மொழி அறிமுகமானது. அவர்களில் ஒருவர் அரசியல் தலைவர், சி.என். அண்ணாதுரை. பிரஞ்ச் மொழியில் த்வா என்றால் ராஜா என்று பொருள். அவர் ராஜாவாக பிறக்கவில்லை. ஆனால் அவரை எங்கள் மனதில் ராஜாவாக அபிஷேகம் செய்தன. நமது மொழி, நமது கலாச்சாரம் மற்றும் நமது உரிமைகள் மீதான எந்தவொரு படையெடுப்பையும் எதிர்கொள்ள அவர் எங்களுக்கு கற்றுக்கொடுத்தார். தமிழ் மீதான காதல் அவரிடம் இருந்து எனக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட 57 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உறுப்பினர்களுடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நேற்று பிப்ரவரி 3 ஆம் தேதி, அதாவது 1969 ஆம் ஆண்டு, என் சித்தாந்தத்தின் பிதாக்களில் ஒருவராக அவர் என்னை அனாதையாக்கிய நாள். அப்போது எனக்கு 14 வயது தான், ஆனால் அவர் என் சகோதர சகோதரிகளை என்னுடன் வாழ விட்டுவிட்டார். அவர் பேசிய இதே அவையில் நானும் பேசுகிறேன். நான் நடுங்குகிறேன், மேடை பயத்தால் அல்ல, உணர்ச்சிகளால். நான் அதை எழுதி அதன் மொழியில் சொன்னேன். அதனால் புயல் எனக்குள் மையம் கொண்டிருக்கிறது. என் உணர்ச்சிப் பெருங்காற்றை வார்த்தைகளால் நேரடியாக வெளிப்படுத்தினால், அது நிச்சயமாக உங்களை புண்படுத்தும். நான்கு நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் காந்தியைப் பற்றி பேசினேன். இன்று 4ஆம் தேதி அண்ணாவின் மகன்களில் ஒருவராகவும், காந்தியின் கொள்ளுப் பேரனாக, பெரியாரின் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன். பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது என் ஆசிரியர்களால் கல்வி கற்று, ஊக்கம் பெற்ற இந்த அவையில் பேசுகிறேன். நான் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியதால் பொருளாதாரம் பற்றி பேச எனக்கு தகுதி இல்லை என்று நீங்கள் கூறலாம். அப்படியே இருக்கட்டும். இருப்பினும், நீங்கள் அனைவரும் எந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு கூடுதல் ஓவிய மாணவராக எனக்கு ஒரு கருத்து உள்ளது” என்று கர்ஜித்து பேசினார்.
Follow Us