2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலின் போது திமுக உடன் ஏற்பட்ட கூட்டணி உடன்படிக்கையில் நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. உடன்படிக்கையின் படி கமல்ஹாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியின்றி தேர்வானார்.

அதன்படி கடந்த (25.07.2025) பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு கமல்ஹாசன் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் இன்று (07/08/2025) பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். 

இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி.

தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்' என தெரிவித்துள்ளார்.