கடலூர் மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பை பேட்டரி வண்டியில், கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் வாக்காளர் அட்டைகள் கிடந்தன. இவற்றை வருவாய்த் துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

கடலூர், மஞ்சக்குப்பம் பில்லு கடைத் தெருவில் உள்ள கடலூர் மாநகராட்சி பிரிவு அலுவலகம் 3-ல் (மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு வருகைப் பதிவேடு எடுக்கும் இடம்) வாயிலில், குப்பை எடுக்கும் மூன்று சக்கர பேட்டரி வண்டி நேற்று (ஜூலை 29) மாலை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று (ஜூலை 30) காலை, வண்டியின் ஓட்டுநர் மற்றும் துப்புரவு பணியாளரான காமாட்சி (38) குப்பை வண்டியை எடுத்தார்.

104

அப்போது, வண்டியில் ஒயர்கள் அறுக்கப்பட்டிருந்தன. மேலும், வண்டியில் குப்பை போடும் இடத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் அட்டைகள் 48, தேர்தல் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் மை, தேர்தல் பணிக்குச் செல்பவர்கள் அணியும் பேட்ச் மற்றும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் இருந்தன.

Advertisment

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் வட்டாட்சியர் மகேஷ், மஞ்சக்குப்பம் வருவாய் ஆய்வாளர் வைத்தியநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, குப்பை வண்டியில் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் அட்டைகள் உள்ளிட்ட பொருட்களைக் கைப்பற்றி, இந்தப் பொருட்களை குப்பை வண்டியில் போட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.