தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட அமைத்து குழு அமைத்துள்ளது. அந்த வகையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை திமுக இன்று அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

Advertisment

அதன்படி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவும், திமுக சார்பில் அமைக்கப்பட்ட திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுவும் அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Advertisment

இந்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு ஐ.யு.எம்.எல். தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “முஸ்லீம் சமூதாயத்துக்காக 16 தொகுதிகளை திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறமுஸ்லீம் அமைப்புகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று கலைஞர் காலத்தில் கேட்டோம். அப்போது கலைஞர் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகளை கொடுத்தார். அதே மாதிரி 5 தொகுதிகளை நீங்களும் கொடுக்க வேண்டும் என்ற குறிப்பை காட்டுவதற்காக நாங்கள் குழுவை அமைத்து திமுகவிடம் பேசினோம். ஆனால் 5 பேர் குழுவில் இன்றைக்கு 4 பேர் தான் போனதால் ஒருவேளை ஐந்தை நான்காக ஆக்கிவிடுவார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது. இன்றைக்கு காலங்கள் மாறி இருக்கிறது.

திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருக்கிற அனைத்து கட்சிகள்ளும் நல்லாட்சியை மீண்டும் கொடுப்பதற்காக பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள். இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை யாரும் வெறுமனே ஒரு அரசியல் கட்சியாக யாரும் தள்ளக்கூடாது. இது ஒரு சமுதாயம் சார்ந்த அரசியல் கட்சி. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு கலைஞர் 5 தொகுதிகளை கொடுத்து எங்களை பெருமைப்படுத்தினார். இப்போதும் 5 தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்று பேசினோம். 5 தொகுதிகளை கொடுக்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் 4 தொகுதியாவது கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை வலியுறுத்தி வந்திருக்கிறோம். சென்ற ஆண்டு மூன்று தொகுதிகளை கொடுத்ததாவதாகவும், அந்த மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது என்றும் திமுக பேச்சுவார்த்தை குழுவினர் கூறினர். தேமுதிக போன்ற புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தங்களது தொகுதிகளை குறைக்கவுள்ளதாகவும், அது போல் கூட்டணி கட்சிகளும் தொகுதிகளை குறைத்து கேட்க வேண்டும் என்றும் கூறினர். அந்த வகையில் ஒரு தொகுதியை விட்டு கொடுக்க கோரிக்கை வைத்தனர். கடந்த முறை 3 தொகுதிகளை வழங்கிய நிலையில், 2 தொகுதிகளையே கொடுக்க விருப்பம் காட்டினர். இதை பற்றி நாங்கள் நன்றாக முடிவு செய்துவிட்டு திரும்பி வருகிறோம் என்று கூறிவிட்டு வந்திருக்கிறோம்.

Advertisment

எத்தனை தொகுதிகளாக இருந்தாலும் திமுக கூட்டணியிலேயே நீடிப்போம். திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணியில நாங்கள் அன்றும் இருந்தோம், இன்று இருக்கிறோம், நாளைக்கும் இருப்போம். அதில் எந்த சந்தேகமும் எங்களுக்கும் கிடையாது, அவங்களுக்கும் கிடையாது. யாருக்கும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார்.