“தேர்தலுக்கு இன்னும் 6, 7 மாதங்கள் உள்ள நிலையில் அதற்கு முன்னால் புதிய கூட்டணி அமையலாம் அல்லது இருக்கும் கூட்டணியில் இருந்து விலகலாம்” என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Advertisment

தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் நடந்த அதிமுக முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, செய்தியாளர்களிடம் பேசும்போது,வரும் சட்டசபைத் தேர்தலுக்காக முதன்முதலில் தேர்தல் களத்திற்கு வந்த இயக்கம் அதிமுக. மக்கள் மன்றத்தை மட்டும் நம்பி, இதுவரை 154 தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளார். மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.

Advertisment

இன்னும் தேர்தலுக்கு 6, 7 மாதங்கள் உள்ள நிலையில், அதற்கு முன்னால் புதிய கூட்டணி அமையலாம் அல்லது இருக்கும் கூட்டணியில் இருந்து விலகலாம். அதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. திமுகவுக்கும் த.வெ.க.வுக்கும் இடையே இரண்டாவது இடத்தைப் பிடித்து, யார் எதிர்க்கட்சியாக வருவது என்றுதான் போட்டி உள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிதான் முதல்வர் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். டி.டி.வி. தினகரன் நிலைப்பாடு பற்றி எங்களுக்கு கவலை இல்லை.நான்கு ஆண்டு காலம் நல்ல ஆட்சி கொடுத்த பழனிசாமியை மக்கள் முதல்வராக முடிவு செய்துவிட்டனர். நிழலின் அருமை வெயிலுக்குள் சென்றால்தான் தெரியும் என்பதுபோல, அதிமுக ஆட்சியின் நன்மையை மக்கள் புரியத் துவங்கியுள்ளனர். திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும்.காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுகவின் தவறைச் சுட்டிக்காட்டவில்லை. காங்கிரஸ் நெல்லை மாவட்டத் தலைவர் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும், இதுவரை கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை, கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. அதையெல்லாம் கேட்காத செல்வப்பெருந்தகைக்கு, அதிமுக பற்றி பேச அருகதை இல்லை என்றார்.

Advertisment

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி