கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த சம்பவத்தை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிப்பதற்கு எதிராக தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதே சமயம் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர் தரப்பில் சிபிஐ விசாரணை கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  

Advertisment

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (13.10.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெறும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இது குறித்து நீதிபதிகள், ‘ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவில் இரு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள். 

Advertisment

sc

அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக் கூடாது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ மாதந்தோறும் அறிக்கை தர வேண்டும். விசாரணையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை அஜய் ரஸ்தோகி முடிவு செய்யலாம். ’ எனத் தெரிவித்தனர். இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீதி வெல்லும்” என 2 வார்த்தைகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கடந்த 13 நாட்களுக்குப் பின் விஜய் மவுனம் கலைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “ சி.எம். சார் உங்களுக்கு ஏதாவது பழிவாங்கும் என்ற எண்ணம் இருந்தது என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என் தோழர்கள் மீது கை வைக்காதீர்கள்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment