திருச்சி, ஸ்ரீரங்கம், திருவாணைக்கோவில் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்த நா. மாரியப்பனுக்கு, நிலுவையில் இருந்த 7.5 மாத ஊதியத் தொகை மற்றும் M.A. படிப்புக்கான ஊக்கத் தொகையை வழங்குவதற்காக, அதே பள்ளியில் இளநிலை உதவியாளராக (கிளார்க்) பணிபுரிந்த ரெங்கராஜன் (வயது 63) ரூ.2,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆசிரியர் மாரியப்பன் 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையின் அறிவுரையின் பேரில், ரசாயனம் தடவப்பட்ட ரூ.2,000 பணத்தை ஆசிரியர் மாரியப்பன், ரெங்கராஜனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள், ரெங்கராஜனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி புவியரசு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, ரெங்கராஜனுக்கு லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5,000 அபராதமும், அரசு பதவியை தவறாகப் பயன்படுத்தியதற்காக 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், தலா 6 மாதம் என மொத்தம் 12 மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இவ்வழக்கில், டி.எஸ்.பி. மணிகண்டன், இன்ஸ்பெக்டர் நர்சக்திவேல் ஆகியோர் சாட்சிகளைத் திறம்பட ஆஜர்படுத்தி, அரசு வழக்கறிஞர் கோபிகண்ணன் வழக்கை வெற்றிகரமாக நடத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்ததற்காகப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.