பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அன்புமணி ராமதாஸ் 100 நாட்களுக்கு உரிமை மீட்டு பயணம் என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு 10 விதமான உரிமைகளை மீட்டெடுக்கவேண்டும் என்கிற பிரச்சார பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இத்தகைய சூழலில் தான் அக்கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருந்தார். அதே சமயம் ராமதாஸுக்குப் போட்டியாக ஆகஸ்ட் 9ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அன்புமணி அதரவாளாருமான வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பா.ம.க. பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக ராமதாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், “தன்னைத்தானே தலைவர் எனச் சொல்லிக் கொண்டு அன்புமணி செயல்படுகிறார். மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 9ம் தேதி நடக்கும் பா.ம.க.வின் பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடைவிதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் (08.08.2025) அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் தனது அறையில் மாலை 05.30 மணிக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். அனைவரின் நலனுக்காக இருவரிடமும் தனித்தனியாகப் பேச உள்ளேன். உடனடியாக ராமதாஸை கிளம்பி வரச் சொல்லுங்கள். இருவரையும் சந்திக்கும் போது கட்சிக்காரர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் யாரும் இருக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
Follow Us