'Join in the morning; resign in the evening' - Manoj Pandian arrives at the Secretariat Photograph: (dmk)
அதிமுக எம்.எல்.ஏவும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன், இன்று (04-11-25) சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ள மனோஜ் பாண்டியன் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் ஆவார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “திமுகவில் இணைந்ததற்கு காரணம், இன்று திராவிட கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கின்ற ஒரு தலைவராகவும், தமிழர்களுக்கு போராடுகின்ற ஒரு தலைவராகவும், தமிழர்களின் உரிமையை எங்கும் அடகு வைக்காத ஒரு தலைவராகவும் முதல்வர் இருக்கிறார். அதனால் சிந்தித்து ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளேன். எஞ்சிய வாழ்க்கையில் திராவிட கொள்கைகளை பாதுகாக்கக்கூடிய இயக்கமாகவும், அதை தலைமையேற்றுக்கூடிய தலைவருடைய சிந்தனைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு தொண்டனாக என்னை இணைத்து பணியாற்ற வந்துள்ளேன்.
இன்று மாலை 4 மணிக்கு என்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன். அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆரும், அதை பாதுகாத்த ஜெயலலிதாவும் எந்த சூழ்நிலையிலும் எந்த இயக்கத்துக்கும் அடகு வைக்கவில்லை. அதிமுக என்பது அவர்களது காலத்து அதிமுக இல்லை. இன்றைய அதிமுக, வேறொரு இயக்கத்தை நம்பி அந்த இயக்கத்தின் சொல்படி தான் நடக்கக்கூடிய ஒரு துர்பாக்கியமான இருக்கின்றது. எந்த கொள்கைக்காக அந்த இயக்கம் உருவாக்கப்பட்டதோ அதை காற்றில் பறக்கவிட்டு, பா.ஜ.கவின் கிளை கழகமாக செயல்படுகிற சூழ்நிலை உள்ளது. திராவிட கொள்கைகளை பறைசாற்றி பாதுகாக்ககூடிய இயக்கமாக திமுக இருப்பதால் இங்கு இணைந்திருக்கிறேன்'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்காக மனோஜ் பாண்டியன் தலைமைச் செயலகம் வந்துள்ளார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் நிலையில் அவர் எம்.எல்.ஏவாக இருக்கும் நெல்லை ஆலங்குளம் தொகுதி காலி தொகுதியாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் அண்மையில் செங்கோட்டையன் நீக்கப்பட்டிருந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us