jharkhand State government's negligence; Officers struggling to complete training and join the workforce
ஜார்கண்ட் மாநிலத்தில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹேமந்த் சோரன் முதல்வராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் காவல்துறை, வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கான பதவிகள் காலியாக இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. இந்த செய்தி, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, 2024 ல் பயிற்சி முடித்த 39 மாநில அளவிலான டிஎஸ்பிக்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. பொதுவாக, பயிற்சி முடித்தவர்களுக்குப் பணி நியமனம் வழங்குவதில் சில நேரங்களில் சிறிது தாமதம் ஏற்படும். ஆனால், அதிர்ச்சி தரும் வகையில் கிட்டத்தட்ட 16 மாதங்களாகப் பயிற்சி முடித்த டிஎஸ்பிக்களுக்கு இன்னும் பணி நியமனம் வழங்கப்படவில்லை. மொத்தமாக 39 டிஎஸ்பிக்களுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது நாட்டிலேயே இது தான் முதல்முறை என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்ற 64 ஆய்வாளர்களுக்கும் இதே போன்ற நிலை நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி, டிஎஸ்பி பதவிக்காகப் பல பேர் காத்திருக்கும் நிலையில், 42 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போலப் பயிற்சி முடித்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளும் ஆறு மாதங்களுக்கு மேலாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும், அவர்களுக்கு இன்னும் பணி நியமனம் வழங்கப்படவில்லை.
காவல்துறையில் மட்டுமல்லாமல், மாவட்ட நிர்வாகத்திலும் இது போன்ற அலட்சியமான போக்கே நிலவுவதாகக் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாக துறையில், வாட்டாச்சித் துறை அலுவலர்களாக பணியாற்றி வந்த 40 பேருக்குக் கோட்டாட்சியராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், அதற்கான அதிகாரப் பூர்வ அரசாணை இன்னும் வழங்கப்படவில்லை. இதனால், பதவி உயர்வு கிடைத்தும், அவர்கள் அந்த பொறுப்பில் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மாநில அரசின் அலட்சியப்போக்கைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே, இது குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போதும், அம்மாநில அரசோ இதற்குச் செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. இது அந்த அதிகாரிகளின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கும் நிலையை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow Us