சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படும்  தேர்தல் அதிகாரியை கண்டித்து அதிமு.க  சார்பில் இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..."சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளில் திமுக அரசு சர்வாதிகாரத்தோடு அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டு, முழுக்க முழுக்க அதைச் சிதைக்கின்ற வகையில் செயல்படுவதை கண்டித்தும், அதற்கு துணைபோகும் அதிகாரிகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

Advertisment

SIR பணிகள் கடந்த 2002-ம் ஆண்டு திமுக மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்த காலத்தில் கொண்டுவரப்பட்டது. அன்றைக்கு வாயை மூடிக்கொண்டு இருந்த ஸ்டாலின் இப்போது எதிர்க்கிறார். வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயரையும், விலாசம் மாறியவர்களின் பெயரையும் நீக்குங்கள் என்று நாங்களும் பல காலமாக தேர்தல் கமிஷனிடம் கேட்டு வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை இந்திய தேர்தல் கமிஷனிடம் சொன்ன பிறகு அவர்கள் தீவிர திருத்தத்தைச் செய்கிறார்கள். இதனால் இறந்தவர்களின் வாக்குகள் போய்விடும். அது போக வேண்டிய வாக்குகள்தானே? 

Advertisment

இறந்தவர்களின் வாக்குகளை நீக்குவதுடன், வாக்குரிமை இல்லாமல் இருப்பவர்களுக்கு வாக்குரிமை கொடுப்பதுதான் ஜனநாயகத்தின் உண்மையான நோக்கம்.  நம் நாட்டில் நிறைய பேருக்கு வாக்குகள் இல்லை. ஆனால் இறந்தவர்களுக்கும் விலாசத்தில் இருந்து மாறியவர்களுக்கும் வாக்குகள் உள்ளன. இதைப் பயன்படுத்தி திமுகவினர் தேர்தல் நாளில் 4 மணியில் இருந்து 5 மணிவரை கள்ள ஓட்டு போட்டு வந்தனர். ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவுக்கு கைகொடுக்கும் ஒரே ஆயுதம் இந்த இறந்தவர்கள் மற்றும் விலாசம் மாறிப் போனவர்களின் வாக்குகள்தான்.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட்டவர்களை பிடித்துக் கொடுத்ததற்காக என் மீதே பொய் வழக்கு போட்டார்கள். கள்ள ஓட்டை நம்பியே திமுக இருப்பதால்தான் இந்த SIR அவர்களுக்கு கசக்கிறது. அதனால்தான் நாம் SIR வேண்டும் என்கிறோம். திமுகவினர் SIR வேண்டாம் என்கிறார்கள்.

Advertisment

SIR வேண்டாம் என்றால் கட்சிக்காரர்களிடம் இது தொடர்பான பணிகளுக்கு  போகவேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே? ஒரு பக்கம் ஒப்புக்கு இதை எதிர்த்துவிட்டு, மறுபக்கம் இதில் கட்சிக்காரர்களை களம் இறக்கிவிட்டு திமுக தீவிரமாக கவனம் செலுத்துகிறது. இந்த விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. துப்புறவு பணியாளர்களையும், எழுதப் படிக்க தெரியாதவர்களையும் 2 அமைச்சர்கள் சொல்படி பி.எல்.ஓவாக போட்டிருக்கிறார்கள்.  அவர்களுக்கு படிவத்தை நிரப்ப தெரியவில்லை. தேர்தல் ஆணையம் SIR கொண்டுவந்த நோக்கத்தை சிதைக்கின்ற வகையில் திமுக செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் திமுக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுகவுக்கு இன்னும் 4 அமாவாசைகள் தான் இருக்கு. மீண்டும் அதிமுக அரசு எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலரும். ஆளும் கட்சிக்கு துதிபாடினால் அதற்குரிய தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்.

வாக்காளர் திருத்தப் பணிகளை நியாயமாக செய்யுங்கள். பிஎல்ஓக்களை படித்தவர்களாக போடுங்கள். வீடு வீடாக அவர்களை போகச் சொல்லுங்கள். திமுகவினர் அந்த பணிகளை செய்தால் அதிமுகவினரின் படிவங்களை கிழித்துப் போட வாய்ப்பு இருக்கிறது" என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’நாங்கள் எல்லா மாவட்டங்களிலும் சில தொகுதிகளில் 10 பூத்களை எடுத்து ஒரு ஆய்வை மேற்கொண்டோம். ராயபுரத்தில் 1 லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் உள்ளன. திருவிக நகரில் 2 லட்சத்து 6 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இதில் ராயபுரத்தில் 10 பூத்களில் மட்டும் 1,700 வாக்குகள் இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்களின் வாக்குகளாக  உள்ளது. 10 பூத்துகளிலேயே இப்படி என்றால் அங்குள்ள 181 பூத்களில் எத்தனை ஓட்டுகள் இருக்கும்?

ஒவ்வொரு தொகுதியிலும் இறந்தவர்கள், விலாசம் மாறிச் சென்றவர்களின் வாக்குகள் சராசரியாக சுமார் 25 ஆயிரம் இருக்கிறது.  இது தேவையா? நியாயமாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் ஆனால் திமுக கள்ள ஓட்டை நம்புகிறது. அதனால்தான் தேர்தல் கமிஷனின் முடிவு அவர்களுக்கு வேப்பங்காயாக கசக்கிறது’’ என்றார் ஜெயக்குமார்.