தமிழக அரசு மகளிருக்குக் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் மாதந்தோறும் 1000 ரூபாயை வழங்கி வருகிறது. ஆனால், இந்த மாதம் அந்த உரிமைத்தொகை 5000 ரூபாயாக மகளிரின் வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்பட்டுள்ளது. இது, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே (கோடை தொகுப்பு உட்பட) மாதங்களுக்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் காரணமாக, பெண்கள் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த உரிமை தொகை மொத்தமாகச் சேர்த்து வழங்குவது பற்றி, எந்தவித அறிவிப்பும் முன்னதாக அறிவிக்கப்படாமல் திடீரென்று இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக ரூ. 5,000 என்ற முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை’ பெறும் 1.31 கோடி பெண்களுக்கு முன்பணமாக ரூ.5000 அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று காலையில் வரவு வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நடவடிக்கை, பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான மற்றும் வரவேற்கத்தக்க முடிவாகும்.

Advertisment

வீட்டின் அன்றாடச் செலவுகள், குழந்தைகளின் கல்வி, சுகாதாரத் தேவைகள் ஆகியவற்றைச் சமாளிக்கப் போராடி வரும் பெண்களுக்கு, இந்த முன்பணம் உடனடி நிவாரணமாகவும், தன்னம்பிக்கை அளிக்கும் ஆதரவாகவும் அமையும். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நியாயமான நிதிகளைத் தர மறுக்கும் ஒன்றிய அரசு மகளிர் உரிமைத் தொகையையும் தேர்தலைக் காரணம் காட்டி முடக்குவதற்கு முன்னெடுப்புகளைச் செய்து வரும் நிலையில் அதனை முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த நடவடிக்கை மெச்சத்தக்கது. குறிப்பாக அடுத்து வரும் மாதங்கள் கோடைக் காலம் மற்றும் பள்ளிக்கூடக் கட்டணம் செலுத்தும் காலம் என்பதைக் கவனத்தில் கொண்டு கருணையுடன் முதலமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி உளமார பாராட்டுகிறது. அடுத்து வரும் திராவிட மாடல் ஆட்சி 2.0 வில் மகளிர் உரிமைத் தொகை ரூ2000 ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியையும் மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.