யூ.பி.எஸ்.சி. தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்களின் வரலாற்றுச் சாதனை என்பது நான் முதல்வன் திட்டத்தின் வெற்றியை நிரூபிக்கும் மகிழ்விற்குரிய தருணம் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி -UPSC) தேர்வின் இந்த ஆண்டின் முடிவுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ள சிறப்பான வெற்றி பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. 

Advertisment

அனைத்திந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே மற்றும் ஏழாம் இடத்தைப் பெற்றுள்ள ராஜா மொகைதீன் உள்ளிட்ட தேர்வானவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக முதன்முறையாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யூபிஎஸ்சி தேர்வில் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கச் சாதனையாகும். இந்த ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 60 பேர் யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதும் மகிழ்ச்சிக்குரியது. 

Advertisment

இவர்களில் சென்னை இக்லாஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயின்ற அப்துல்லாஹ் அப்ரித்தும் தேர்ச்சி அடைந்துள்ளார் என்பது மிகுந்த மகிழ்வைத் தருகிறது. இதில் முக்கியமாக, தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் என்ற திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் என்பது, இந்தத் திட்டத்தின் செயல்திறனையும் முக்கியத்துவத்தையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. மாணவர்களுக்குத் தரமான பயிற்சி, வழிகாட்டுதல், தங்குமிடம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி, நாட்டின் உயரிய சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறும் வகையில் அவர்களை உருவாக்கும் இந்தத் திட்டம் பாராட்டத்தக்கது.

naan-mudalvan-mks-open-ceremony
கோப்புப்படம்

மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் நோக்கில் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து தமிழ்நாட்டு மாணவர்களும் நாட்டின் நிர்வாகத் துறையில் உயர்ந்த பணிகளைச் செய்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. அவர்களின் எதிர்காலப் பயணம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment