தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிக திமுக கூட்டணிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Advertisment

நேற்று ஓபிஎஸ் திமுகவில் இணைந்த நிலையில் அதிமுகவினர் பலரும் ஓபிஎஸ் மீது விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்தநிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்,''ஓபிஎஸ் யாரிடம் வேண்டுமாவது போய் சேர்ந்து கொள்ளட்டும் அதைப் பற்றி ஒன்றும் இல்லை. ஆனால் அதிமுக இனி ஜெயிக்காது, அதிமுகவிற்கு எதிர்காலம் இல்லை, தென் தமிழகத்தில் அவர் யாரையும் வளர விட மாட்டார் என்று அபாண்டமான பொய்யை பேசுகிறீர்களே உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கிறதா? நீங்கள் என்னைக்கு போய் அறிவாலயத்தில் அடைக்கலம் ஆனீர்களோ அன்றே நீங்கள் இறந்த பிணத்திற்கு சமம். நீங்கள் இனிமேல் எது சொன்னாலும் தொண்டர்களோ மக்களோ நம்ப தயாராக இல்லை.

Advertisment

எல்லா பதவி சுகத்தையும் அனுபவித்து விட்டு அங்கே போய்விட்டீர்கள். உங்களுடைய பூர்வீகம் என்ன? எந்த வழியில் வந்தீர்கள்? எப்படி உயர்ந்தீர்கள்? எல்லாமே தாய் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். உங்களுக்கு என்ன வந்துவிட்டது இப்பொழுது? ஏன் இது மாதிரி முடிவு எடுத்தீர்கள்.  அதிமுகவை எம்ஜிஆர் எதற்கு ஆரம்பித்தார்? ஜெயலலிதா தன் வாழ்நாளையே இதற்காக கொடுத்தார். திமுக தொடுத்த பொய் வழக்கில் தான் ஜெயலலிதாவின் உயிர் போனது. அதற்குமே ஓபிஎஸ் உளவாளியாக இருந்திருப்பாரோ முதலமைச்சர் பதவிக்காக என்கின்ற ஒரு பெருத்த சந்தேகம் கூட இப்பொழுது எழுகிறது. ஏனென்றால் பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் போல தெரிகிறது. யார் வேண்டுமானாலும் திமுகவிற்கு போகலாம் ஆனால் இவர் போகலாமா? திமுகவுக்கு சென்றுள்ள ஓபிஎஸ்-ஐ எப்படி அழைப்பார்கள்?

முன்னாள் முதலமைச்சர் கலைஞர், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்று அழைப்பார்களா? எதற்கு இந்த ஈனப்பிறப்பு. எதற்கு இந்த ஈன பிழைப்பு. அதிமுக ரத்தம் போடுகிறது என்று சொன்னீர்கள், ஜெயலலிதாவை தெய்வம் என்று சொன்னீர்கள் அந்த தெய்வத்தை ஏமாற்றி இருப்பதுதானே இப்பொழுது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. உங்களுக்கு இதற்குமேல் என்ன அதிமுகவில் பதவி கொடுப்பார்கள். நீங்கள் அதிமுகவை இப்படி காட்டிக்கொடுப்பதனால் திமுகவில் என்ன பதவி கொடுத்திருக்கிறார்கள். அதனால் என்ன நீங்கள் வாழ்வு பெற்று விடுவீர்கள்?''என்றார்.

Advertisment