'It neither got wet nor sprouted as EPS said' - Udhayanidhi interview in Thanjavur Photograph: (dmk)
இபிஎஸ் சொன்னபடி நெல் மூட்டைகள் நனையவோ, முளைக்கவோ இல்லை என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் நெல் கொள்முதல் கிடங்கில் ஆய்வு செய்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''தமிழகத்தில் மொத்தம் 1,825 நிழல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பொய்கள் மூலம் விவசாயிகள் வாக்குகளை அறுவடை செய்யும் பழனிசாமியின் எண்ணம் ஈடேறாது. நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று எந்த இடத்திலும் விவசாயிகள் புகார் அளிக்கவில்லை. குறிப்பாக கொள்முதல் நிலையங்களில் செயல்பாடுகள் பற்றி முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பான தகவல்களை உங்களிடத்தில் சொல்லியிருக்கிறார்.
திறந்தவெளி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை குடோனுக்கு எடுத்துச் செல்லாததால் அங்கு புதிய நெல் மூட்டைகளை வைக்க இடம் இல்லை என்று தவறான குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். வழக்கமாக குறுவை சாகுபடி காலத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி தான் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். ஆனால் திமுக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் ஒன்றாம் தேதியே அதாவது ஒரு மாதத்திற்கு முன்பாகவே நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கத் தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்படி சென்ற செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து நேற்று வரை 50 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 1,825 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல் அரசு எடுத்த முயற்சியால் வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறுவை சாகுபடி காலத்தில் கிட்டத்தட்ட ஐம்பது நாட்களில் 10 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதில் எட்டு லட்சம் மெட்ரிக் டன், 81% நெல் மூட்டைகள் குடோனுக்கு ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு லட்சத்து 93 ஆயிரம் மெட்ரிக் டன் குடோனுக்கு கொண்டு செல்லும் பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இபிஎஸ் சொன்னபடி நெல் மூட்டைகள் நனையவோ, முளைக்கவோ இல்லை'' என்றார்.
Follow Us