'குழந்தைகளின் திறமைகளை கண்டுபிடிக்க வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கூட்டு முயற்சி' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ''பெற்றோர்கள் எப்பொழுதுமே தான் படும் கஷ்டங்களை பிள்ளைகளுக்குச் சொல்லவே மாட்டார்கள். பிள்ளைகள் நல்ல வழியில் செல்ல வேண்டும் என ஆசைப்படுவார்கள். எனவே பெற்றோர்களுக்கு ஏற்றார் போல் நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்ளுங்கள். பெற்றோர்களுக்கு நான் வைக்கக்கூடிய கோரிக்கை எந்த நேரத்திலும் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிடாதீர்கள். நம்ம குழந்தைகளுக்கென்று இருக்கும் திறமையைக் கண்டறிய வேண்டியது பெற்றவர்கள் கடமை. 

பெற்றோர்களுக்கு இதைவிட வேற என்ன வேலை இருக்கிறது? குழந்தை பிறந்தது போய் ஸ்கூலில் விட்டுவிட்டேன். 3 மாதத்துக்கு ஒரு தடவை தேர்வு வருது. அப்ப மட்டும் தான் குழந்தையை அக்சஸ் பண்ணுகிறேன் என்பது பெற்றவர்கள் வேலை கிடையாது. அதை யார் வேண்டுமானாலும் செய்துகொண்டு போகலாம். பெற்றவர்கள் என்பவர்கள் குழந்தை பள்ளிக்கு சென்றுவிட்டு வரும் பொழுது அவர்களுடைய நடவடிக்கைகளை அப்சர்வ் பண்ணுங்க. எந்த விஷயங்களில் அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று பாருங்கள். எடுத்த உடனே குறை கண்டுபிடிக்காதீர்கள். அந்த குழந்தையால் அழகாக ஒரு ஓவியம் வரைய முடியுமா? அந்த குழந்தையால் அழகாக கவிதை எழுத முடியுமா? அந்த குழந்தைக்கு நன்றாக பேசும் திறமை இருக்கிறதா என்று கண்டறியுங்கள்.

இதை பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கான கூட்டுப் பொறுப்பாக நான் பார்க்கிறேன். அதனால் தான் தமிழ்நாட்டுடைய முதலமைச்சர் கலைத் திருவிழா என்ற ஒன்றைப் பள்ளிகளில் கொண்டு வருகிறோம்.  சில பிள்ளைகளுக்கு பாடத்தை கவனித்து நல்ல மதிப்பெண் வாங்க முடியும். ஆனால் எல்லாரும் நூற்றுக்கு நூறு வாங்கி விட முடியாது. சில குழந்தைகள் 60 மதிப்பெண் தான் வாங்குவார்கள். சில குழந்தைகள் ஜஸ்ட் பாஸ் கூட ஆவார்கள். ஆனால் ஜஸ்ட் பாஸ் வாங்குகின்ற பிள்ளைக்கு இருக்கும் திறமை 90 மதிப்பெண் வாங்கும் பிள்ளைகளுக்கு இருக்காது. அந்த திறமையை கண்டறிய வேண்டியது யாருடைய பொறுப்பு, நம்முடைய பொறுப்பு தான்'' என்றார்.