திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (07.01.2025) நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்ளச் செல்லும் வழியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.அதோடு, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, உரையாற்றினார்.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திண்டுக்கல் பயணத்தை முடித்துக் கொண்டு மதுரை நோக்கி காரில் திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆஸ்டன்பட்டி சென்று கொண்டிருந்தது. அச்சமயத்தில் திடீரென அவருடைய காரின் சக்கரம் வெடித்து நிலை தடுமாறியது. இருப்பினும் காரின் ஓட்டுநர் சாமார்த்தியமாகச் செயல்பட்டதால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேறொரு காரில் மாறி அங்கிருந்து புறப்பட்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் நோக்கி சென்றார். அதன் பின்னர் பழுதான காரின் டயரை மாற்றும் பணிகள் முடிக்கப்பட்டு அங்கிருங்கு புறப்பட்டுச் சென்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணம் செய்த காரின் டயர் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us