ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, கடந்த சனிக்கிழமையன்று (28.02.2026) இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாகச் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் இன்றளவும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த தாக்குதல்கள் காரணமாக ஈரானில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

இந்த நிலையில், ஈரானும் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளவாடங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் நிலையில், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், "ஹார்மோஸ்" நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் உலக பொருளாதார நிலை மோசமடையும் என்று உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. 

Advertisment

எனவே இந்த போர் விரைவில் முடிவுக்கு வரவேண்டியது அவசியம் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. ஆனால், இன்று வரை இந்த தாக்குதல்கள் முடிவிற்கு வந்ததாகத் தெரியவில்லை. நேற்று (05.03.2026) முற்பகலில் இலங்கை தெற்கு கடற்பகுதியில், இந்தியாவில் இருந்து சென்ற "டீனா" எனும் ஈரான் போர்ப் பயிற்சி கப்பலை அமெரிக்கா தாக்கியது. இதனை அப்பட்டமான விதி மீறல் என்று பல்வேறு தளங்களில் இருந்து கண்டங்கள் எழுந்துள்ளன. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. 

வளைகுடா கடற்பகுதியில் உள்ள அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்கக் கப்பல் தீப்பற்றி எரிந்தது .அந்த கப்பலில் இருந்தவர்களின் நிலை என்ன என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஏற்கனவே, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஈரானின் பயிற்சி போர்க் கப்பலைத் தாக்கியதற்கு, அமெரிக்க நிச்சயம் வருத்தப்பட வேண்டியிருக்கும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment