Iran retaliates against US allies at tensions rise in gulf countries
ஜெனிவாவில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்க இடையிலான பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாத நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியிருந்தது. அதன் காரணமாக, மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளுக்கிடையிலும் பதற்றமான சூழல் இருந்து வந்தது.
இந்த சூழ்நிலையில், இன்று (28-02-26) ஈரானின் தலைநகர் தெக்ரானில் இஸ்ரேல், வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதன் காரணமாக, தலைநகர் முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது. இந்த சமயத்தில், அமெரிக்காவும் இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரானைத் தாக்கியது. இந்த தாக்குதலில் 1000 க்கும் மேற்பட்டோர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன. ஈரான் தலைநகர் முழுவதும் சுமார் 30 இடங்களுக்கும் மேலாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஏவுகணைகள் ஒரே நேரத்தில் ஈரானைத் தாக்கியது. குறிப்பாக, இந்த தாக்குதல்களில் தலைநகரில் உள்ள பாராளுமன்றம் குறிவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இந்த தாக்குதல் ஈரானின் அணு ஆயுதங்களை அழிப்பதற்கான ஒரு நடவடிக்கை என்று இந்த இரு நாடுகளும் தெரிவித்து வருகின்றன.
தாக்குதல் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு தற்போது ஈரான் பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேலின் ஏவுகணைகளை ஈரான் தடுத்து வீழ்த்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க நேச நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க நேச நாடுகளான இஸ்ரேல், பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தெற்கு ஈரானில் உள்ள பள்ளியில் 36 மாணவிகள் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நடக்கும் போரில் வளைகுடா நாடுகள் சிக்கியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் வான் எல்லை மூடப்பட்டுள்ளது.
Follow Us