மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தமிழக அரசின் இடைக்கால பட்ஜெப் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட 2026–27ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை, ஒன்றிய அரசின் தொடர்ச்சியான அலட்சியமும் பாரபட்ச அணுகுமுறையும் நிலவிய நிலையிலும், மக்களின் நலனை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொறுப்பான நிதிநிலை அறிக்கையாகும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு அளிக்கும் தமிழ்நாடு, வரி வருவாயில் முன்னணியில் இருந்தும், அதற்கேற்ப மத்திய அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடுகளையும் திட்ட அனுமதிகளையும் பெற முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. மெட்ரோ ரயில் திட்டங்கள், பேரிடர் நிவாரண நிதி, கல்வி–சுகாதார கட்டமைப்பு, சமூகநலத் திட்டங்களுக்கு உரிய மத்திய பங்குத்தொகை போன்றவற்றில் ஒன்றிய பாஜக அரசு காட்டும் பாரபட்சமான அணுகுமுறை மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.
இத்தகைய சூழ்நிலையிலும், மக்கள் நலத்தைக் கைவிடாமல், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரையும் மையமாகக் கொண்டு இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை உருவாக்கியுள்ளது பாராட்டுக்குரியது. மாநிலத்தின் சொந்த வளங்களை நம்பி சமூகநீதி, சமத்துவம், வளர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இது அமைந்துள்ளது.
ஒன்றிய அரசின் நிதி மறுப்பு, திட்ட அனுமதிகளில் தாமதம், மாநில உரிமைகளைச் சுருக்கும் நடவடிக்கைகள் ஆகியவை தொடரும் நிலையில், தமிழ்நாடு அரசு தன் பொறுப்பை உணர்ந்து மக்கள் நலத் திட்டங்களை இடைநிறுத்தாமல் முன்னெடுத்து வருவது கூட்டாட்சி தத்துவத்தின் உண்மையான வடிவத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை ஒன்றிய அரசின் அலட்சியத்துக்கு எதிரான ஒரு ஆவணமாகவும், மக்களை பாதுகாக்கும் அரசின் உறுதியான நிலைப்பாடாகவும் விளங்குகிறது.
ஒன்றிய அரசு தனது பாரபட்ச அணுகுமுறையை கைவிட்டு, தமிழ்நாட்டிற்கு உரிய நிதி, திட்ட அனுமதி மற்றும் அரசியல் மரியாதையை வழங்க வேண்டும் என்பதே இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை நாட்டு மக்களுக்கு உணர்த்தும் முக்கியமான செய்தியாகும்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர்களின் நலன், உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் நிலைத்த வேளாண் வளர்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
மொத்தமாக ₹47,248.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வேளாண் துறைக்கு அளிக்கப்படும் முன்னுரிமையை வெளிப்படுத்துகிறது. உழவர்களின் வருமானத்தை உயர்த்துதல், உற்பத்தி-உற்பத்தித் திறனை அதிகரித்தல், காலநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளுதல் என்ற நீண்டகால இலக்குகளை இந்த இடைக்கால பட்ஜெட் பிரதிபலிக்கிறது.
இரு இடைக்கால நிதிநிலை அறிக்கைகளும், கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களின் தொடர்ச்சியையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்கின்றன. உழவர்களின் வருமான உயர்வு, உணவு–ஊட்டச்சத்து பாதுகாப்பு, சமூகநீதி ஆகிய இலக்குகளை ஒருங்கிணைத்த இந்த நிதிநிலை அறிக்கைகளை மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக வரவேற்கிறது" என்று கூறியுள்ளார்.
Follow Us