கொடுமுடி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது ஸ்மார்ட் போனில் சமூக வலைத்தளங்களில் ஈடுபாடுடன் இருந்துள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த கவின்குமார் (23) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். முதலில் சாதாரணமாக தொடங்கிய அவர்களது நட்பு பின்னர் நெருக்கமானது. கவின்குமார் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைக் கூறி நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
பின்னர் கவின்குமார் சிறுமியைப் பார்ப்பதற்காக அடிக்கடி கொடுமுடி வந்து சென்றுள்ளார். அப்போது ஆசை வார்த்தை கூறி கவின்குமார் இந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்து அதைக் கண்டுபிடித்த அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, சிறுமி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து கொடுமுடி போலீசில் புகார் அளித்தனர். அதன் போலீசார் இது குறித்து விசாரித்த போது சிறுமியை கவின்குமார் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கவின்குமார் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.