நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று (30-06-25) வழங்கறிஞர் மாரீஸ்குமார் முறையீடு செய்தார். 'பாதிக்கப்பட்டோர் மனுவாக தாக்கல் செய்யுங்கள், விசாரணைக்கு எடுக்கிறோம்' என்று நீதிமன்றம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து முழுமையான விவரங்களுடன் மனு தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையில் 'திமுகவைச் சேர்ந்த சேங்கைமாறன், பஞ்சாயத்து தலைவரான வேங்கைமாறனின் மனைவி, திமுக செயலாளர் மகேந்திரன், மானாமதுரை டிஎஸ்பி ஆகியோர் அஜித் வீட்டிற்கு சென்று 50 லட்சம் தருவதாக அவருடைய பெற்றோரிடம் சமரசம் பேசியுள்ளனர். விசாரணையில் அஜித் தப்பி ஓட முயன்றது போது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக காவல்துறையினர் நாடகமாடி கட்டுக்கதை விட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட காவலர் கண்ணன் என்பவர் மானாமதுரை டிஎஸ்பியின் சிறப்புப்படையை சேர்ந்தவர். அவர் திருப்புவனம் வந்து விசாரித்தது விதிமீறலாகவே பார்க்கப்படும்' என வழக்கறிஞர் ஹென்றி வாதத்தை முன் வைத்தார்.

வழக்கறிஞர் மாரீஸ்குமார் வைத்த வாதத்தில் 'காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்த அந்த ஐஏஎஸ் அதிகாரி யார்? தற்போது வரை கூட உடல் கூறாய்வு அறிக்கையை அஜித்தின் தாயாரிடமும் சகோதரிடமும் காவல்துறையினர் வழங்கவில்லை' என வாதத்தை வைத்தார். மேலும் அஜித்தை போலீசார் சுற்றி நின்று தாக்குவதை  நபர் ஒருவர் ஜன்னல் வழியாக எடுத்த காட்சிகள் நீதிபதி முன் சமர்ப்பிக்கப்பட்டது.  

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் சரமாரியாக கேள்வி எழுப்பினார். 'அரசு மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும். அஜித்தை ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தவில்லை. இளைஞரை விசாரிக்க வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல யார் அதிகாரம் கொடுத்தது? சிவகங்கை மாவட்ட எஸ்.பி-ஐ உடனடியாக மாற்றுவதற்கான காரணம் என்ன? புலனாய்வு செய்வதற்குதான் காவல்துறை. சிசிடிவி பதிவிலிருந்து மறைக்க விரும்புகிறீர்களா? ஏன் வெளி இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்கிறீர்கள்? அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? முழு உண்மையையும் காவல்துறை சொல்ல மறுக்கிறீர்கள்.

யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும். அஜித்குமாரின் உயிரிழப்பிற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இல்லையெனில் இதில் மாவட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட நேரிடும் என தெரிவித்த நீதிபதி, வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.


பின்னர் மீண்டும் விசாரணை தொடங்கியது. மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வர் நேரில் ஆஜராகி அஜித்தின் உடற்கூறாய்வு அறிக்கையை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

1.வலது கை மூட்டுக்கு மேலே காயம்.
2.வலது கை மணிக்கட்டுக்கு கீழே சிராய்ப்பு காயம்.
3.வலது பக்க நெற்றியில் சிராய்ப்பு காயம்.
4.வலது பக்க கள்ளத்தில் சிராய்ப்பு காயம்.
5.இடது பக்க காதில் ரத்தம் உறைந்த நிலையிலும் வடிந்த நிலையிலும் உள்ளது.
6.இடதுபுஜத்தில் சிராய்ப்பு காயம்.
7.இடது பக்க தோள்பட்டை முதல் முழங்கை மூட்டு வரை கன்றிய காலம்.
8.இடது பக்க கை மூட்டில் சிராய்ப்பு காயங்கள் -நான்கு.
9.இடது கை மணிக்கட்டுக்கு மேல் பகுதியில் மூன்று கிராய்ப்பு காயங்கள்.
10.இடது பக்க விலாவில் கன்றிய காயம்.
11.இடது காண்டை காலில் சில சிராய்ப்பு காயம். கை விரல்கள் உட்புறமாக படங்கி விரைப்பாக காலாப்பட்டது.
12.இடது பக்க முதுகில் விலா பின்புறம் கன்றிய காயம்.
13.இடது பக்க இடுப்பில் சிராய்ப்பு காயம்.
14.வலது பக்க பின் முதுகில் சிராய்ப்பு காயம்.
15.  மோஷன் போன நிலையில் உள்ளது.
16.இடது கால் இடது மணிக்கட்டுக்கு மேல் தோல் பிரிந்த காலம்.
17.இடது கால் பாதத்திற்கு மேல் சீராப்பு.
18.வலது பக்க காதில் உள்பக்கமாக த்தம் உறைந்த நிலையில் காணப்பட்டது.

என அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் 44 காயங்கள் இருந்தது உடற்கூறு ஆய்வு அறிக்கையில் உறுதியானது. இதனை பார்த்து அதிர்ந்த நீதிபதிகள் 'பதவி ஆணவத்தில் போலீசார் இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இது சாதாரண கொலை வழக்குபோல் தெரியவில்லை. அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 44 இடங்களில் காயங்கள் உள்ளது. இளைஞரின் உடலின் ஒரு உறுப்புகளை கூட இவர்கள் (போலீசார்) விட்டு வைக்கவில்லை. மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது' என்றார்.

அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், 'இதில் உயர் அதிகாரிகள் சம்பந்த பட்டிருந்தால் அனைத்து உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த அரசு தயாராக உள்ளதாக தெரிவித்ததோடு, பதில் மனு போட விசாரணைக்கு இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார். இருப்பினும் நீதிபதிகள் காவலர்கள் கைது கண்துடைப்பு எனக் கூறி அவகாசம் கொடுக்க மறுத்தனர்.

'மடப்புரம் கோவில் ஊழியர் அஜித்குமார் அவர்களுக்கு யார் பொறுப்பு?' என கேள்வி எழுப்பிய நீதிபதி 'கோவில் சிசிடிவி காட்சிகள் எங்கே?' என கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் சிசிடிவி காட்சிகளை கோவில் ஆணையர் சிடியாக தாக்கல் செய்தார்.
நாட்கள் செல்ல செல்ல தடையங்கள் அழிக்கப்படலாம். 'உயர் அதிகாரிகள் தலையீடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என அரசு தரப்பு கூறியுள்ளதால் பதில் மனுவெல்லாம் தாக்கல் செய்ய வேண்டாம் என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தீர்ப்பை இன்றே வசிப்பதாக தெரிவித்துள்ளனர்.