மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா எப்போது நடைபெறும் என்ற தகவலைக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரையில் உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் உட்பகுதியில் புது மண்டபம் அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான கடைகள் இருந்தன. இத்தகைய சூழலில் தான் இந்த கடைகள் அகற்றப்பட்டுப் பூட்டப்பட்டன. இதனையடுத்து நினைவுச் சின்னங்கள் நிறைந்த இந்த மண்டபத்தைப் புதுப்பித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விட வேண்டும் எனக் கூறி மதுரையைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (18.09.2025) விசாரணைக்கு வந்தது.
அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், “மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா வரும் ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அதற்கு முன்னதாகவே புது மண்டபத்தைப் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்துவிடும். எனவே கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “வரும் டிசம்பர் மாதம் கடைசி வாரத்திற்குள் புது மண்டபம் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்து விடுமா? என்பது குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.