தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி (27.09.2025) அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக, இந்த சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி சகாயம், தவெகவைச் சேர்ந்த சிவநேசன், சரத்குமார் என 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதைக் கண்டுகொள்ளாமல் இருத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், தனியார் சொத்துக்கள் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். புஸ்ஸி ஆனந்த் மற்றும் சி.டி.நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அதே சமயம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் சி.டி. நிர்மல்குமார் ஆகியோரை பிடிப்பதற்காக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான பொதுநல வழக்குகள் மற்றும் முன் ஜாமீன் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை (03.10.2025) விசாரணைக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது த.வெ.க.வுக்கு தடை கோரும் ரமேஷ் என்பவரின் மனுவும் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
அதோடு 7 பொதுநல மனுக்கள் மீது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்த உள்ளது. அதன்படி இந்த பொதுநல மனுக்களின் விசாரணை முடிந்த பிறகு முன் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரின் முன் ஜாமீன் முன் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.