விமான நிறுவனங்களுக்குச் சர்வதேச சிவில் விமான அமைப்பு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. அதன்படி மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தன்னுடைய விதிகளைச் சமீபத்தில் புதுப்பித்தது. அதில் விமானிகளின் நலன்களையும் பயணிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, விமானிகளுக்கான பணி நேரத்தைக் குறைத்தது. அதோடு, அவர்களுக்கான ஓய்வு நேரத்தையும் அதிகரிக்கும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த விதிமுறைகள் மாற்றம் காரணமாக இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதன் காரணமாகக் கடந்த சில நாட்களாக பல்வேறு இண்டிகோ பயணிகள் விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விமானிகள் பற்றாக்குறையால் சென்னை விமான நிலையத்தில் 7வது நாளாக இன்றும் (08.12.2025) இண்டிகோ விமானச் சேவையானது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 38 விமானங்களும், சென்னைக்கு வருகை தரும் விமானங்கள் என மொத்தம் 71 இண்டிகோ விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து இண்டிகோ விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதால் பாதிக்கப்பட்ட பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மற்றொருபுறம் இண்டிகோ விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து பயணக் கட்டணத்தைப் பயணிகள் திரும்பப் பெற்று வருகின்றனர். ஏற்கனவே முன்பதிவு செய்தோருக்கு இண்டிகோ விமான நிறுவன கவுன்ட்டர்களில் பணம் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் 10ஆம் தேதிக்கு மேல் படிப்படியாக விமானச் சேவையானது அதிக அளவில் கூடுதலாக இயக்கப்படும் என்றும், வழக்கம் போல் விமானங்கள் இயக்கப்படும் எனவும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சார்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/08/indigo-flight-2025-12-08-10-17-25.jpg)