Skip to main content

மலைத்தேனுக்கு ஆசைப்பட்டு குகையில் சிக்கிய இளைஞர் - வெடி வைத்து பாறைகளைத் தகர்த்து உயிருடன் மீட்பு

Published on 15/12/2022 | Edited on 16/12/2022

 

nn

 

மலைத்தேனுக்கு ஆசைப்பட்டு குகையில் விழுந்து சுமார் 46 மணி நேரம் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீட்கப்பட்டுள்ளார். ஏழு ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி, பாறைகளை வெடிவைத்துத் தகர்த்து அதிகாரிகள் அவரை  மீட்டுள்ளனர்.

 

தெலங்கானா மாநிலம், காமா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ரெட்டி பேட்டையைச் சேர்ந்தவர் ராஜு. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் அந்தப் பகுதியில் உள்ள சிங்கராயபள்ளி வனத்தில் உள்ள மலை ஒன்றின் மீது ஏறி  தேன் சேகரிக்க முயன்றார் ராஜு. அப்போது தேன் கூடு இருந்த குகைக்குள் அவருடைய செல்போன் விழுந்துவிட்டது. அதை எடுக்க முயன்ற ராஜு, தலைகீழாக குகையில் விழுந்து சிக்கிக்கொண்டார். அவரைக் காணாமல் தேடிய குடும்ப உறுப்பினர்கள்,  காலையில்  அவர் குகையில் சிக்கிக்கொண்டிருப்பதை அறிந்து பல்வேறு வகையான மீட்பு முயற்சிகளை எடுத்தனர். போலீசார், தீயணைப்பு படையினர் ஆகியோரும் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், அவரை மீட்க இயலவில்லை.

 

இந்நிலையில்,  ஜேசிபி, ஹிட்டாச்சி போன்ற இயந்திரங்கள் மூலம் பாறைகளை நகர்த்தி அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மிகவும் கனமான பாறைகளுக்கு இடையே உள்ள சிறிய குகைக்குள் அவர் சிக்கிக் கொண்டதால் அந்தப் பாறைகளை இயந்திரங்கள் மூலம் நகர்த்த இயலவில்லை. எனவே, வேறு வழியில்லாத நிலையில், ஏழு ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி,  பாறைகளை வெடி வைத்துத் தகர்த்து ராஜுவை அதிகாரிகள் மாலையில் மீட்டனர். உடனடியாக அவரை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ராஜு உயிருடன் மீட்கப்பட்டது, அவருடைய குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒயின் ஷாப்புகளில் அதிகவிலை! ஆத்திரத்தில் பெட்டி பெட்டியாக அள்ளிச்சென்ற பொதுமக்கள்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

தெலங்கானாவில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறி, நான்கு ஒயின் ஷாப்புகளை முற்றுகையிட்ட பொதுமக்கள், கடைகளில் இருந்த ரூ.22 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை அள்ளிச்சென்றனர். தெலங்கானா, பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம், தெகுலப்பள்ளியில் MRP விலையைவிட ரூ.20 முதல் ரூ.30 வரை அதிக விலைக்கு, மது விற்பனையாளர்கள் சிண்டிகேட் அமைத்து மது விற்பதாக  மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மதுக்கடைகள் முன்பு திரண்டு, நான்கு ஒயின்ஷாப்புகளில்  இருந்த  மதுபானங்களை அள்ளிச் சென்றனர். பொது மக்கள் பலரும் மது பாட்டில்களை அள்ளிச்சென்ற நிலையில், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் மதுபாட்டில்களை எடுத்துச்சென்றனர். இதனை ஊழியர்கள் தடுக்க முயன்றும் முடியாததால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

இச்சம்பவத்தின்போது, பெரும்பாலும் பெண்களே மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர். இதனையடுத்து, டிஎஸ்பி சந்திரபானு தலைமையில் அங்கு வந்த காவல்துறையினர், கடை உரிமையாளர்களின் புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.  மொத்தத்தில் சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பொது மக்கள் அள்ளிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Next Story

“தீவிரமான மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Tamilisai Selandararajan's explanation of his resignation

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, ஆளுநர் மாளிகையில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “3 ஆண்டுகள் எப்படி ஓடியது என்பது ஆச்சரியமாக உள்ளது. ஆளுநர் பதவியில் அதிகமாக முதல்வர்களை பார்த்ததில் பெருமை கொள்கிறேன். 4 முதல்வர்களை எனது பதவியின் போது பார்த்து பயணித்துள்ளேன். வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வந்தால், நான் பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் இணைந்து 25 ஆண்டுகள் ஆகிறது. மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அது ஆண்டவனும், ஆள்பவனும் தான் முடிவு செய்வார்கள். புதுச்சேரியை வேறு மாநிலம் என்று எப்போதும் பார்த்ததில்லை. தன்னை வேறு மாநிலத்தவர் என்று யாரும் பார்க்க வேண்டாம்” என்று கூறியிருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழிசை செளந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வரவிருக்கிற மக்களவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி சார்பாக பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதேபோல், தமிழகத்திலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 39 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இந்த தேர்தலில், புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க. சார்பாக தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடப் போவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் தூத்துக்குடி அல்லது புதுச்சேரியில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடப் போவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காகத் தான் மனமுவந்து ராஜினாமா செய்திருக்கிறேன். தெலங்கானா, புதுச்சேரி மக்கள் என் மீது காட்டிய அன்பிற்கும் நான் நன்றியுடையவளாக இருப்பேன். மக்களுக்கு நேரடியாக பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நான் மக்கள் ஆளுநராக தான் இருந்தேன். என்னுடைய ராஜினாமா ஏற்றுக்கொண்ட பிறகு என்னுடைய எதிர்கால திட்டத்தை பற்றிச் சொல்கிறேன்” எனத் தெரிவித்தார். முன்னதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “மக்கள் சேவைக்காக மீண்டும் வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தெலுங்கானா மக்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி. நான் எப்போதும் தெலுங்கானாவின் சகோதரி. அவர்களின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி” எனத் தெரிவித்திருந்தார்.