
திருமணம் ஆன தனது காதலியை பார்க்கச் சென்ற இளைஞரை, உறவினர்கள் சேர்ந்து ஈவு இரக்கமின்றி அடித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகரின் பர்பூர்வா கிராமத்தைச் சேர்ந்த இளைஞரும், பெண் ஒருவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 5ஆம் தேதி அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தனது காதலி எங்கு இருக்கிறார்? என்ற தகவல் அறிந்ததும் அந்த நபர் திருமணமான தனது காதலியை பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அந்த பெண்ணும், தனது பழைய காதலனை சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. பெண்ணின் காதலன் வீட்டிற்குள் இருப்பதை சந்தேகித்த குடும்பத்தினர், தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது அவர்கள், அவர் ஒரு அலமாரிக்குள் மறைந்திருப்பதைக் கண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த உறவினர்கள், அந்த இளைஞரை வெளியே இழுத்து, சரமாரியாக அடித்து கயிறுகளால் நாற்காலியில் கட்டி வைத்தனர். இதையடுத்து இளைஞரின் தலைமுடியை வழித்து முகத்தில் கரியைப் பூசினர். இந்த சம்பவம் நடந்ததை அடுத்து அங்கு கூட்டம் கூடியது. இதனை அங்கிருக்கும் நபர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.