yogi adityanath about babri masjid verdict

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 17 பேர் விசாரணைக் காலத்திலேயே உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து எஞ்சிய 32 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தினந்தோறும் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய லக்னோ சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ், குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. பாஜக தலைவர்கள் மீதும், துறவிகள் மீதும் காங்கிரஸ் அரசு பொய் வழக்குகள் போட்டது தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வாக்கு அரசியலுக்காகப் பொய் வழக்குகள் போடப்பட்டதற்காக, சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கோர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment