Skip to main content

யாஷ் புயல்: உடனடி நிவாரண பணிகளுக்காக ரூ. 1000 கோடி - பிரதமர் மோடி அறிவிப்பு!

Published on 28/05/2021 | Edited on 28/05/2021

 

narendra modi

 

வங்கக்கடலில் உருவான யாஷ் புயல், கடந்த 26 ஆம் தேதி ஒடிஷா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கிடையே கரையை கடந்தது. இதனையொட்டி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி, ஒடிசா முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

 

இதனைத்தொடர்ந்து மேற்குவங்கம் சென்ற பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் மம்தா மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துவதாக இருந்தது. இந்தநிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தாவும், மேற்குவங்க தலைமை செயலாளரும் 30 நிமிடங்கள் தாமதமாக ஆலோசனை கூட்டத்திற்கு வந்ததாகவும், வந்தவுடன் புயல் தாக்கம் குறித்த பேப்பர்களை வழங்கிவிட்டு வேறு கூட்டங்கள் இருப்பதாக கூறி உடனடியாக சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மோடி சில அதிகாரிகளோடு மட்டும் ஆலோசனை நடத்தியாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்தநிலையில் பிரதமர் மோடி செய்த ஆய்வு தொடர்பாக பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவை; ஒடிசாவின் பத்ராக் மற்றும் பலேஸ்வர் மாவட்டங்களிலும், மேற்கு வங்காளத்தின் பூர்பா மெடினிபூரிலும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் மோடி வான்வெளி ஆய்வு மேற்கொண்டார். நடைபெற்று வரும் நிவாரண பணிகள் குறித்து புவனேஸ்வரில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். புயல் காரணமாக ஒடிசாவில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது என்றும், மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்டின் சில பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமருக்கு விளக்கப்பட்டது. பிரதமர் மோடி, உடனடி நிவாரண பணிகளுக்காக ரூ .1000 கோடி நிதி உதவியை அறிவித்துள்ளார். இதில் ஒடிசாவுக்கு உடனடியாக ரூ .500 கோடி வழங்கப்படும். மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ள 500 கோடி, சேதத்தின் அடிப்படையில் அளிக்கப்படும்.

 

சேதத்தின் அளவை மதிப்பிட மத்திய அரசு, மத்திய மந்திரிகள் அடங்கிய குழுவை அமைக்கும். அக்குழு மாநிலங்களுக்குச் சென்று ஆய்வு செய்யும். அதனடிப்படையில் மேலும் உதவி வழங்கப்படும். இந்த கடினமான நேரத்தில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு நெருக்கமாக செயல்படும் என்று ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் உறுதியளித்தார். பிரதமர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது ஆதரவை வெளிப்படுத்தினார் மேலும் இந்த பேரழிவின் போது உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணமாக அவர் அறிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.