Advertisment

மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்; அமைச்சருடனான சந்திப்பில் நடந்தது என்ன?

Wrestlers' strike temporarily called off; What happened in the meeting with the minister?

பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சிங் மீது வரும் 15 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதி அளித்த நிலையில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து டெல்லி போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர். அதில் பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மேலும் ஒரு வழக்கில் 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் சரண் சிங் மீது கைது உள்ளிட்ட எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம் என வீராங்கனைகள் அறிவித்தனர்.

Advertisment

தொடர்ந்து மல்யுத்த வீரர்களை சந்தித்த விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத், அவர்களுடன் ஆலோசனை நடத்தி 5 நாட்கள் அவகாசம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதன் பின் மத்திய அரசுக்கு ஜூன் 9 வரை அவகாசம் அளித்தார். இதையடுத்து மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டவர்களை அமித்ஷா கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சந்தித்து பேசினார். 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பஜ்ரங் பூனியா, அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து வெளியே பேசக்கூடாது என தங்களிடம் தெரிவித்துவிட்டு அரசு தரப்பிலேயே தகவல் கசியவிடப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். புகார் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக அமித்ஷா உறுதி அளித்ததாகவும் பஜ்ரங் பூனியா தெரிவித்தார். இதனிடையே பிரிஜ்பூஷணிடம் டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகத் தகவல் வெளியானது. வழக்கு தொடர்பாக 200 பேரிடம் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. நேற்று முன்தினம் வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அழைப்பு விடுத்திருந்தார்.

நேற்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இல்லத்திற்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா உடன் சாக்‌ஷி மாலிக், விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயத்தும் பேச்சுவார்த்தைக்காக சென்றனர். பேச்சுவார்த்தையின் போது 5 கோரிக்கைகளை மல்யுத்த வீரர்கள் முன்வைக்க இருப்பதாகத் தெரிகிறது. பிரிஜ்பூஷண் சிங்கினை கைது செய்ய வேண்டும்;விளையாட்டுத்துறையில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்து தூய்மைப்படுத்த வேண்டும்;இதுபோன்ற பிரச்சனை ஏற்படும்போது அதை நிவர்த்தி செய்யவும் பிரச்சனையை முடித்து வைக்கவும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்;இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு நியாயமான தேர்தலை நடத்த வேண்டும்;பிரிஜ் பூஷண் சிங் குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடக்கூடாது என ஐந்து கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த ஐந்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால்போராட்டத்தை கைவிடுவோம் என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில், நாளை மறுநாளுடன் விவசாய சங்கங்கள் கொடுத்த கெடுவும் முடிவுக்கு வருகிறது. அதற்குள் பிரிஜ்பூஷண் சிங் கைது செய்யப்படவில்லை என்றால் டில்லியை முற்றுகையிடுவோம் என மல்யுத்த வீரர்கள் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சிங் மீது வரும் 15 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதி அளித்த நிலையில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுமார் 6 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை முடிந்து செய்தியாளர்களைச்சந்தித்த பஜ்ரங் பூனியா ஜூன் 15க்குள் நடவடிக்கை எடுப்பதாக அனுராக் தாக்கூர் உறுதி அளித்ததாகவும் அவரது உறுதியை ஏற்று தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஜூன் 30 ஆம் தேதிக்குள் இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்படும் எனத்தெரிவித்தார்.

wrestlers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe