Skip to main content

"இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளமாட்டேன்" - ராகுல் காந்தி ஆவேசம்!

Published on 31/08/2021 | Edited on 31/08/2021

 

rahul gandhi

 

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் மறக்கமுடியாத சம்பவம்  ஜாலியன் வாலாபாக் படுகொலை. ஜெனரல் டயர் தலைமையிலான பிரிட்டிஷ் படைகள்,  ஜாலியன் வாலாபாக்கில் கூடியிருந்த இந்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 1000திற்கும் மேற்பட்டவர்களைப் படுகொலை செய்த இந்த சம்பவம் இந்தியர்களின் விடுதலை உணர்வை வீறு கொண்டு எழச் செய்தது.

 

இந்திய சுதந்திரமடைந்த பிறகு, இந்த படுகொலையை நினைவு கூறும் வகையில், ஜாலியன் வாலாபாக்கில் நினைவிடம் எழுப்பப்பட்டது. இந்நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு 20 கோடி ரூபாய் செலவில், இந்த ஜாலியன் வாலாபாக் நினைவிட வளாகத்தைப் புதுப்பித்தது. புதுப்பிக்கப்பட்ட இந்த வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமையன்று திறந்து வைத்தார்.

 

இந்தநிலையில் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு சமூகவலைதங்களிலும், வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியிலும் கண்டனம் எழுந்துள்ளது. ஜாலியன் வாலாபாக்கிற்குள் ஜெனரல் டயர் தனது படைகளோடு புகுந்த நுழைவுவாயிலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஜாலியன் வாலாபாக்கிலிருந்து வெளியேறும் பகுதியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டிலிருந்து மக்கள் தப்ப முடியாதபடி அடைக்கப்பட்ட குறுகிய பாதையில் பளபளப்பான புதிய தளம் அமைக்கப்பட்டுள்ளது.

 

துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பிக்க மக்கள் குதித்த 'ஷஹீதி கு' (தியாகிகள் கிணறு) கண்ணாடியைக் கொண்டு மூடப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களினால் ஜாலியன் வாலாபாக்கில் நினைவிடம் தனது பழமையை இழந்துவிட்டதாகவும், அங்கு நடந்த படுகொலையின் கோரத்தை வெளிப்படுத்தும் தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

இந்நிலையில் ஜாலியன்  வாலாபாக் நினைவிடத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து ராகுல் காந்தியும் மத்திய அரசை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் தியாகியின் மகன். தியாகிகள் அவமானப்படுவதை நான் எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ள மாட்டேன். இந்த அநாகரீகமான கொடுமையை நாங்கள் எதிர்க்கிறோம்" எனக் கூறியுள்ளார். மேலும் தனது இன்னொரு ட்வீட்டில், "சுதந்திரத்திற்காகப் போராடாதவர்களால், அதற்காகப் போராடியவர்களைப் புரிந்து கொள்ள முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.