Skip to main content

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா; குடியரசுத் தலைவர் ஒப்புதல்

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Women's Reservation Bill President's approval

 

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் போது புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் கடந்த 19 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்திருந்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ‘நாரி சக்தி வந்தன்’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த மசோதாவின்படி இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றிய பிறகு, இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் என அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்திருந்தார். அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்று மசோதா நிறைவேற்றப்பட்டது.

 

இதையடுத்து கடந்த 20 ஆம் தேதி மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்