மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிரியா லஸ்கரே என்ற உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் தனது கணவன் மற்றும் குழந்தையுடன் பேருந்து ஒன்றில் பயணித்துள்ளார். அப்போது அந்த பேருந்தில் மது போதையில் பயணித்த இளைஞர் ஒருவர் பிரியா லஸ்கரேவை கையால் தொட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதனைப் பிரியா கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் போதை தலைக்கேறிய இளைஞர் மீண்டும் அவர் மீது கைவைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரியா, இளைஞரின் சட்டையை கெட்டியாக பிடித்துகொண்டு கண்ணத்தில் சரமாரியாக அறைந்துள்ளார். இடது கை, வலது கை என்று மாற்றி மாற்றி 20க்கும் மேற்பட்ட முறை இளைஞரின் போதை தெளியும் அளவுக்கும் லெப்ட் ரைட் வாங்கியுள்ளார். பேருந்துகளில் பெண்கள் மீது நடக்கும் அத்துமீறல்களை கண்டிக்க வேண்டிய நடத்துனரும், ஓட்டுநரும் கண்டுகொள்ளாமல் இருந்தது குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து போதையில் அத்துமீறிய இளைஞரை போலீசாரிடம் ஒப்படைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தனக்கு நடந்த அத்துமீறலை துணிவுடன் எதிர்த்து இளைஞரை வெளுத்து வாங்கிய பெண்ணின் செயலுக்கு பலரும் பாராட்டிகளை தெரிவித்து வருகின்றனர்.