ஓடும் காரில் இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தவர்கள், அவரது 3 வயது குழந்தையை சாலையில் தூக்கி வீசியுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் முஷாஃபர் நகரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவருக்கு வேலைவாங்கித் தருவதாகக் கூறி தன்னை சந்திக்க அழைத்த மெகதா என்னும் நபரை இளம்பெண் சந்தித்துள்ளார்.
அங்கு தன் குழந்தையுடன் சென்றிருந்தஇளம்பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மயக்கமடையச் செய்த மெகதா, தனது நண்பருடன் அவரைக் காரில் ஏற்றி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அப்போது, அவர்களுக்கு இடையூறாக இருந்த குழந்தையை காருக்கு வெளியே சாலையில் தூக்கி வீசியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த குழந்தையை மீட்ட கிராம மக்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
காருக்குள் வன்புணர்வு செய்யப்பட்ட இளம்பெண்ணை சாபர் பகுதியில் இறக்கிவிட்ட மெகதா மற்றும் அவனது நண்பரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர். மயக்கம் தெளிந்த இளம்பெண் இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்துள்ள நிலையில், குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.