Skip to main content

சாக்குப்பையில் பெண்ணின் சடலம்... நண்பனை கொலைக்காரனாக்கிய ஆசை! 

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

woman passes away incident made by friend

 

புதுச்சேரி வில்லியனூர் கனுவாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலபாஸ்கர் என்பவரது மனைவி ஆரோக்கியமேரி (31). இவர்களுக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. ஆரோக்கியமேரி கடந்த 10 ஆண்டுகளாக கனகசெட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றிவந்துள்ளார். இவர், கடந்த 19ஆம் தேதி மதியம் பணிக்குச் சென்றுவிட்டு, இரவு வீடு  திரும்பவில்லை என அவரது உறவினர்கள் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை அடுத்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து ஆரோக்கியமேரியை தேடிவந்தனர்.

 

இந்நிலையில் ஆரோக்கியமேரியின் உறவினர்கள், அவருடன் மருத்துவமனையில் பணிபுரியும் அரியூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுனர் ரமேஷ் என்பவர்தான் ஆரோக்கியமேரியை கடத்தியுள்ளார். அதனால் அவரை உடனடியாக கைதுசெய்து விசாரித்தால் ஆரோக்கியமேரி கிடைத்துவிடுவார் என்று கூறி நேற்று முன்தினம் (22.08.2021) இரவு வில்லியனூர் காவல் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டு பின் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று விடியற்காலை ரமேஷை மேட்டுப்பாளையம் பகுதியில் கைதுசெய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆரோக்கியமேரியை கொலை செய்து அவரது சடலத்தை தமிழக பகுதியான பூத்துறை கிராமத்தில் உள்ள அடர்ந்த பகுதியில் போட்டுவிட்டு வந்ததாக கூறியுள்ளார்.

 

woman passes away incident made by friend

 

அதனையடுத்து அங்கு சென்ற போலீசார், சாக்குமூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆரோக்கியமேரியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனைத் தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து ரமேஷிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டனர். விசாரணையில், சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் ஆரோக்கியமேரி பணி முடிந்து தனது தோழியுடன் வீட்டுக்குத் திரும்பிவந்துள்ளார். அவரது தோழி கோட்டக்குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுவிட்ட நிலையில், ஆரோக்கியமேரி மட்டும் தனியாக தனது பைக்கில் வந்துள்ளார். இதனிடயே அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ரமேஷ் பணி முடிந்து அருகில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். அவ்வாறு வரும்போது இன்றைக்கு எப்படியாவது ஆரோக்கியமேரி அணிந்திருக்கும் 8 பவுன் நகையைப் பறித்துவிட வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார்.

 

அதன்படி இரவு 10 மணிக்கு மேல் புதுச்சேரி சண்முகபுரத்துக்கு வந்துள்ளார். ஆரோக்கியமேரி வரும் நேரத்தில் சாலையில் தனியாக நின்று அவர், தனது வண்டி பழுதாகிவிட்டது லிஃப்ட் கொடுக்க முடியுமா? என்று கேட்டுள்ளார். ஆரோக்கியமேரியும் கருணை உள்ளத்துடன் லிஃப்ட் கொடுத்துள்ளார். அப்போது கோர்க்காட்டில் தனது நண்பர் ஒருவர் நிற்பதாகவும் அங்கு சென்றுவிடும்படியும் கூறியுள்ளார். அதன்படி ஆரோக்கியமேரி கோர்க்காடு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் ரமேஷ் ஏரிக்கரையில் தனது நண்பர் நிற்பதாக கூறி அங்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தனது தாயார் மருத்துமனையில் சிகிச்சை பெறுவதால் அதற்குப் பணம் தேவைப்படுகிறது, உங்களின் நகையைக் கொடுத்து உதவ முடியுமா என ஆரோக்கியமேரியிடம் கேட்க, அதற்கு ஆரோக்கியமேரி மறுப்பு தெரிவிக்கவே, அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென ரமேஷ் அவரது கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.

 

woman passes away incident made by friend

 

பின்னர் அவரது உடலை சுமந்து சென்று விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பைபாஸ் சாலையில் சர்வீஸ் சாலை ஓரம் வைத்து, ஒருலிட்டர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதில் அவரது ஆடைகள் மட்டும் எரிந்துள்ளது. மீதி எரியாமல் இருந்த உடலை சாக்கு பையில் திணித்து வீசிவிட்டு, அவர் அணிந்திருந்த 8 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். பின்னர் போலீசார் தன்னை தேடுவதை உணர்ந்த ரமேஷ், ஆரோக்கியமேரி உடலை மீண்டும் கொண்டு வந்து புதுச்சேரி அருகில் உள்ள பூந்துறை காட்டுப்பகுதியில் வீசியுள்ளார். பின்னர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். கொலை நடந்த இடத்திற்கு வந்த ஆரோக்கியமேரியின் உறவினர்கள், சாக்கு மூட்டையில் கிடந்த அவரது உடலைப் பார்த்துக் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய பரபரப்பு கடிதம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Wife who lost her husband passed away in Chennai

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(26) பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவரும், கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பிரவீனும் ஷர்மிளாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சாதி மதங்களை மறந்த இவர்கள் தங்களது காதலைத் தொடர்ந்தனர்.

பெண்ணின் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அவர்கள் உடனடியாக ஷர்மிளாவுக்கு தனது சொந்த சமூகத்திலேயே திருமண வரன் பார்த்து வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஷர்மிளா, இச்சம்பவம் குறித்து தன் காதலனான பிரவீனிடம் தெரிவித்துள்ளார். ஒருபுறம் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், இந்தக் காதல் ஜோடி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய ஷர்மிளா, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தன் காதலன் பிரவீனை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட விவகாரம் ஷர்மிளாவின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ததை அடுத்து பெண் வீட்டார் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையில், திருமணம் செய்துகொண்ட இந்தக் காதல் ஜோடி 2 மாதங்கள் வெளியூரில் வசித்துவந்த நிலையில் ஜனவரி மாதம் தான் பள்ளிக்கரணை பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, ஷர்மிளாவின் அண்ணனான தினேஷ் என்பவர் பிரவீனை கொலை செய்துவிடுவேன் எனத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்துள்ளது.

இத்தகைய சூழலில், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பிரவீன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அன்றைய தினம் தனது மனைவி ஷர்மிளாவுடன் இருந்த பிரவீன், இரவு 9 மணியளவில் சாப்பாடு வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது, இதற்காகவே காத்துக்கொண்டிருந்த ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ், தனது 4 நண்பர்களுடன் வந்து பிரவீனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத சமயத்தில் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து பிரவீனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.

இந்தக் கொலை வெறி தாக்குதலில் பிரவீன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரவீன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், பிரவீன் கொல்லப்பட்ட தகவலை அறிந்த அவரது மனைவி ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மேலும், வெட்டுக்காயங்களுடன் இருந்த பிரவீனின் உடலைப் பார்த்து அழுததில் அந்த இடம் முழுக்க சோகத்தில் மூழ்கியது.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அப்போது, டாஸ்மாக் கடை வாயிலில் வைத்து பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் 4 நபர்கள் பிரவீனை ஆணவக் கொலை செய்ததும் தெரியவந்தது. அதன்பேரில், இந்த வழக்கை துரிதப்படுத்திய பள்ளிக்கரணை உதவி ஆணையர் தலைமறைவான தினேஷ் மற்றும் அவரது நண்பர்களைப் பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையில், பிரவீனை கொலை செய்த பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் அவருடைய நண்பர்களான ஸ்டீபன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீராம் மற்றும் ஜோதிலிங்கம் உள்ளிட்ட 5  பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஷர்மிளா, தனது கணவன் கொலை வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், பிரவீன் கொலை வழக்கில் போலீசார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், " குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது ஷர்மிளா மிரட்டப்பட்டதாகவும், பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமான ஷர்மிளாவின் பெற்றோர் துரை - சரளா மற்றும் அவரது அண்ணனான நரேஷ் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. தற்போது, சிறையில் இருக்கும் ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் ஏப்ரலில் பெயிலுக்கு விண்ணப்பித்த நிலையில் இது ஷர்மிளாவுக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளனர். அதே நேரம், தனது கணவரை இழந்த துக்கம் தாளாமல் இருந்த ஷர்மிளா போலீசாரின் அலட்சிய போக்கால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.

இத்தகைய சூழலில், யாரும் எதிர்பாராத சமயத்தில்  தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காது என்று எண்ணிய ஷர்மிளா, கடந்த 14 ஆம் தேதியன்று அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  ஷர்மிளாவின் மாமனார், மாமியார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில், ஷர்மிளாவுக்கு கழுத்து எலும்பு, நரம்பு, உள்ளிட்டவை பாதிக்கப்பட்டதால் அவர் கோமா நிலைக்குச் சென்றார் . இதையடுத்து அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷர்மிளா, கடந்த திங்கட்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார். தன்னுடைய கணவன் கொலை செய்யப்பட்ட 2 மாதங்களில் மனைவியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையை உலுக்கியுள்ளது.

அதே வேளையில், ஷர்மிளா தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "தனது கணவர் சென்ற இடத்திற்கே தானும் செல்வதாகவும், தன் சாவுக்கு காரணம் துரைகுமார், சரளா, நரேஷ் உள்ளிட்டோர்தான் என்று ஷர்மிளா தன்னுடைய குடும்பத்தார் பெயர்களை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், பிரவீனின் மாமியார், ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில், ஷர்மிளா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.