
பெண் ஒருவர் தனது மருமகனை கொலை செய்து உடலை 3 துண்டுகளாக வெட்டி சிமெண்ட் சுவரில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதாம் நதாப். இவர் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் கடந்த மே 18ஆம் தேதி தனது ஸ்கூட்டரில் இருந்து வீட்டை விட்டு வெளியேறிய சதாம் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், சதாம் நதாப் திருமணமான தனது அத்தை மெளமிதா ஹாசன் நதாப் வீட்டில் வசித்து வந்ததாகவும், அவர்கள் இருவரும் ஒன்றாக வேலை பார்த்து வந்ததாகவும், அவர்களுக்குள் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து மெளமிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில், சதாமை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
தனது அந்தரங்க புகைப்படத்தை எடுத்து தொடர்ந்து மிரட்டி வந்ததால் ஆத்திரத்தில் சதாமை கொலை செய்ததாகவும், அவரின் உடலை 3 துண்டுகளாக வெட்டி தந்தையின் வீட்டின் படிக்கட்டுகளுக்கு அடியில் சிமெண்டில் புதைத்ததாகவும் மெளமிதா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சதாம் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இருப்பினும், இந்த கொலை பணத்திற்காக நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்படி, மெளமிதாவிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.