Skip to main content

“பாகிஸ்தான் பொய்யான தகவல்களை பரப்புகிறது” - விங் கமாண்டர் வியோமிகா சிங்!

Published on 10/05/2025 | Edited on 10/05/2025

 

Wing Commander Vyomika Singh says Pakistan is spreading false information 

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம் போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீரில் உள்ள ராஜோரி பகுதி கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

அந்த வகையில் இந்த பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் அரசு அதிகாரியான்  மாவட்ட கூடுதல் மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தாப்பா மற்றும் பொதுமக்கள் 4 பேர் உள்ளிட்ட மொத்தம் 5 பேர் பலியாகினர். இந்நிலையில் டெல்லியில் மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பாகிஸ்தானின் நடவடிக்கைகள் ஆத்திர மூட்டுகிறது. மேலும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன என்று நான் பலமுறை கூறியுள்ளேன். அந்த வகையில் பாகிஸ்தான் ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு இந்தியா பொறுப்பான மற்றும் தகுந்த முறையில் பாதுகாப்பாக எதிர்வினையாற்றியுள்ளது. இன்று அதிகாலையில் தாக்குதல்கள் அதிகரித்தது” எனத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ராணுவ கர்னல் சோபியா குரேஷி கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவம் மேற்கு எல்லைகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. இந்தியாவின் இராணுவ தளங்களைத் தாக்க ட்ரோன்கள், நீண்ட தூர ஆயுதங்கள், சுற்றித் திரியும் வெடிமருந்துகள் மற்றும் போர் விமானங்களைப் பயன்படுத்தியுள்ளது. இந்தியா பல ஆபத்துக்களைத் தடுத்து நிறுத்தியது. இருப்பினும் பாகிஸ்தான் 26க்கும் மேற்பட்ட இடங்களில் வான் வழியாக ஊடுருவ முயன்றது, மேலும் அவர்கள் உதம்பூர், பூஜ், பதான்கோட், பதிண்டா ஆகிய இடங்களில் உள்ள விமானப்படைத் தளங்களில் உள்ள இந்திய உபகரணங்கள் சேதப்படுத்தினர்.

மேலும் இந்திய ராணுவ பணியாளர்களைத் தாக்கினர். பஞ்சாபின் விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து அதிகாலை 01:40 மணிக்கு அதிவேக ஏவுகணைகளைப் பயன்படுத்தினர். அதோடு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளைக் கூட தாக்கினர்” எனத் தெரிவித்தார். மேலும் விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், “இந்திய ஆயுதப் படைகள் விரைவான மற்றும் தகுந்த பதிலடியாக அடையாளம் காணப்பட்ட ராணுவ இலக்குகளில் மட்டுமே துல்லியமான தாக்குதலை மேற்கொண்டன.

Wing Commander Vyomika Singh says Pakistan is spreading false information 

இந்திய எஸ் - 400 பாதுகாப்பு  அமைப்பை அழித்ததாகவும், சூரத் மற்றும் சிர்சாவில் உள்ள விமான நிலையங்களை அழித்ததாகவும் கூறி, பாகிஸ்தான் தொடர்ந்து தீங்கிழைக்கும் தவறான தகவல் பிரச்சாரத்தைச் செயல்படுத்த முயன்று வருகிறது. பாகிஸ்தான் பரப்பும் இந்தப் பொய்யான கூற்றுக்களை இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்