'ரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தற்பொழுது வரை எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை' என மத்திய ரயில்வேதுறை இணை அமைச்சர் சோமண்ணா  தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து காஞ்சிபுரம் இடையிலான பல்வேறு ரயில்வே துறை சார்ந்த மேம்பாட்டு திட்டங்களை பார்வையிடுவதற்காக மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா நேற்று சென்னை வந்திருந்தார். நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து இன்று சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வரை நடக்கக்கூடிய பல்வேறு ரயில்வே மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்வதற்காக சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டார்.

 

A4222
RAILWAY Photograph: (RAILWAY)
Advertisment

 

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் செய்தியாளர்கள் தமிழக முதல்வர் சார்பில் ரயில் கட்டணத்தை உயர்த்த கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டு எழுதப்பட்ட கடிதம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இணையமைச்சர் சோமண்ணா, ''இதுவரை ரயில் கட்டணத்தை உயர்த்தும் முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை. இதற்கான ஆலோசனை மட்டுமே நடைபெற்று வருகிறது. ஆலோசனைகளுக்கு பிறகு பிரதமர் மோடி தான் இது குறித்து முடிவெடுப்பார்.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரயில்வே துறையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது. இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் உலகத்திலேயே இரண்டாவது இடத்தில் இந்திய ரயில்வே துறை வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ரயில் கட்டண உயர்வு தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால் என்ன முடிவு என்பதை பிரதமர் மோடி தான் முறையாக அறிவிப்பார்'' என்றார்.